தூக்கிலிடப்பட்ட நிர்பயா வழக்கு குற்றவாளிகள்! - பிரபல நடிகை கருத்து
டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு நடந்த மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயா கற்பழிப்பு சம்பவம் இந்தியாவையே உலுக்கியது. நான்கு பேரால் நாசமாக்கப்பட்டு சித்ரவதைக்கு உள்ளான நிர்பயா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளித்தும், சில நாட்களில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
இந்த குற்றத்தில் ஈடுபட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டாலும், இந்த வழக்கு கடந்த 7 வருடங்களாக நடந்து வந்த நிலையில், இன்று அதிகாலை 5.30 மணிக்கு நான்கு குற்றவாளிகளையும் திகார் சிறையில் தூக்கிலிட்டு தண்டனையை நிறைவேற்றப்பட்டது.
இந்த தண்டனைக்கு ஏராளமானவர்கள் வரவேற்பு தெரிவித்து வந்த நிலையில், நடிகையும், காங்கிரஸ் பிரமுகருமான குஷ்பு, ”ஒரு தாயாக இந்த தீர்ப்பை வரவேற்கிறேன். ஆனாலும் தண்டனைகள் உடனடியாக வழங்கியிருக்க வேண்டும். அப்போது தான் குற்றங்கள் குறையும். ஏன் 7 வருட கால தாமதம்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.