Mar 16, 2020 08:07 AM

ஹரியும் இல்லை, வெற்றிமாறனும் இல்லை! - சூர்யா எடுத்த திடீர் முடிவு

ஹரியும் இல்லை, வெற்றிமாறனும் இல்லை! - சூர்யா எடுத்த திடீர் முடிவு

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘சூரரைப் போற்று’ படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், சூர்யா தனது 39 வது படத்தில் ஹரியும் இணைகிறார். ‘அருவா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. ஸ்டுடியோ க்ரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது. படத்தை தீபாவளீக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

 

மேலும், சூர்யாவின் 40 வது படத்தை வெற்றிமாறன் இயக்குவார் என்றும் அதிகாரப்பூர்வமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ‘வாடிவாசல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.

 

’அருவா’ படத்திற்கு முன்பாகவே ‘வாடிவாசல்’ படம் அறிவிக்கப்பட்டாலும், ’அருவா’ படத்தின் படப்பிடிப்பு முதலில் தொடங்கும் என்பதை படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி ஏப்ரல் மாதம் அருவா படப்பிடிப்பு தொடங்கும் என்று அறிவித்தனர். ஆனால், திடீர் முடிவாக இயக்குநர் ஹரியின் ‘அருவா’ மற்றும் வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ இரண்டுக்கும் முன்பு வேறு ஒரு படத்தில் சூர்யா நடிக்க தொடங்கியிருக்கிறாராம்.

 

‘கூட்டத்தில் ஒருவன்’ என்ற படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இயக்கும் இப்படத்திற்கு ‘எலிவேட்டை’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 8 ஆம் தேதி செஞ்சி அருகே தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வரை சத்தமில்லாமில் நடந்துக் கொண்டிருக்கிறது.

 

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் குறித்து இதுவரை எந்தவித அறிவிப்பையும் படக்குழு வெளியிடவில்லை. ஆனால், இப்படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடிக்க திட்டமிட்டிருக்கிறார்களாம். அதன்படி, இப்படத்தை முடித்த பிறகே ஹரியின் ‘அருவா’ படப்பிடிப்பில் சூர்யா கலந்துக் கொள்வார் என்று கூறப்படுகிறது.