Dec 14, 2019 11:53 AM

பாண்டியராஜனின் பிடிவாதம்! - கோடி ரூபாய் கொடுத்தாலும் கொடுக்க மாட்டாராம்

பாண்டியராஜனின் பிடிவாதம்! - கோடி ரூபாய் கொடுத்தாலும் கொடுக்க மாட்டாராம்

தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குநராகவும், நடிகராகவும் திகழ்ந்தவர்களில் பாண்டியராஜனும் ஒருவர். கடந்த 1985 ஆம் ஆண்டு வெளியான ‘கன்னி ராசி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான பாண்டியராஜன், இளம் வயதில் இயக்குநர் ஆனவர்களில் ஒருவர் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார்.

 

மேலும், தனது இரண்டாவது படமான ‘ஆண் பாவம்’ படம் மூலம் நடிகராகவும் அறிமுகமானவர், அதில் இருந்து படம் இயக்குவதோடு தொடர்ந்து நடித்தும் வந்தார்.

 

காமெடி கலந்த குடும்ப பாங்கான திரைப்படங்களை இயக்கி வெற்றி பெற்ற பாண்டியராஜனின் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ’கைவந்த கலை’ இப்படத்திற்குப் பிறகு படம் இயக்கவில்லை என்றாலும், தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் பாண்டியராஜன் இயக்கி நடித்த ‘ஆண் பாவம்’ திரைப்படம் தமிழ் சினிமா வரலாற்றில் முக்கியமான படமாகவும், ரசிகர்களின் பேவரைட் படமாகவும் உள்ளது.

 

இந்த நிலையில், ‘ஆண் பாவம்’ என்ற தலைப்பை தங்களது படங்களுக்கு வைக்க சில முன்னணி இயக்குநர்கள் விரும்பினாலும், அந்த தலைப்பை பாண்டியராஜன் கொடுக்க மறுத்து வருகிறாராம்.

 

அறிமுக இயக்குநர் ஒருவரது இயக்கத்தில் சித்தார்த் நடிக்க இருக்கும் படத்திற்கு ஆண் பாவம் என்ற தலைப்பு வைக்க விரும்பிய படக்குழு பாண்டியராஜனை சந்தித்து, தலைப்பை கேட்டிருக்கிறார்கள். ஆனால், அவர் தலைப்பை கொடுக்க மறுத்ததோடு, கோடி ரூபாய் கொடுத்தாலும் ஆண் பாவம் தலைப்பை கொடுக்க முடியாது, என்று கூறினாராம்.

 

தனக்கு மிகப்பெரிய அடையாளமாக இருப்பது ‘ஆண் பாவம்’ படம் தான். அந்த தலைப்பை வேறு ஒரு படத்திற்கு வைப்பதன் மூலம் தனது அடையாளத்தை இழக்க விரும்பவில்லை, என்று கூறினாராம்.