Mar 06, 2018 06:54 AM

ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய ‘பரியேறும் பெருமாள்’!

ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய ‘பரியேறும் பெருமாள்’!

‘கபாலி’ திரைப்படம் மூலம் இந்திய சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய இயக்குநர் பா.ரஞ்சித் மீண்டும் ரஜினியுடன் இணைந்திருக்கும் ‘காலா’ மூலம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் அவர் தயாரித்திருக்கும் ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படமும் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

 

இயக்குநர் ராமிடம் இணை இயக்குநராக பணியாற்றியவரும், ‘தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்’ என்ற சிறுகதை தொகுப்பு மற்றும் ‘மறக்கவே நினைக்கிறேன்’ என்ற தொடரின் மூலமாகவும் இலக்கிய உலகத்தில் பரவலாக அறியப்பட்ட எழுத்தாளருமான மாரி செல்வராஜ் இயக்குநராக அறிமுகமாகும் ‘பரியேறும் பெருமாள்’ முழுக்க முழுக்க தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் எடுகப்பட்டிருக்கிறது.

 

தென் தமிழக கிராமங்களிலும், நகரங்களிலும் பள்ளி, கல்லூரிகளிலும் எளிய மக்களிடமும் நுணுக்கமாக பரவிக்கொண்டிருக்கும் பிரிவினை படி நிலைகளையும், அது உருவாக்கும் பெரும் தாக்கத்தையும் பற்றி உண்மைக்கு மிக அருகில் சென்று பேசுகிற படமாக இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. காதலையும் வாழ்வியலையும் அதனைச் சுற்றி நடைபெறும் உளவியல் அரசியலையும் பேசும் படமாக பரியேறும் பெருமாள் இருக்கும்.

 

பரியேறும் பெருமாளாக, சட்டக்கல்லூரி மாணவர் கதாபாத்திரத்தில் கதிர் நடிக்க, அவருடன் கயல் ஆனந்தி, யோகி பாபு, லிஜீஷ், மாரிமுத்து தவிர திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த மக்களையே பெரும்பான்மையான கதாபாத்திரங்களில் நடிக்க வைத்துள்ளனர்.

 

சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, விவேக் மற்றும் மாரி செல்வராஜ் இருவரும் பாடல்கள் எழுதியிருக்கிறார்கள். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்ய, ஆர்.கே.செல்வா எடிட்டிங் செய்துள்ளார். சாண்டி நடனம் அமைக்க, ஸ்டன்னர் சாம் ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். சி.வேலன் மற்றும் ஆர்.ராகேஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தின் நிர்வாக தயாரிப்பு பணியை லிஜீஷ் கவனிக்கிறார்.

 

சமீபத்தில் வெளியான “கருப்பி என் கருப்பி...” என்ற இப்படத்தின் பாடல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியிருப்பதோடு, அப்படாலில் இடம்பெற்ற நாய் உருவ பொம்மையும் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகள் விறுவிறுபாக நடைபெற்று வரும் ‘பரியேறும் பெருமாள்’ விரைவில் வெளியாக உள்ளது.