Feb 01, 2018 12:52 PM

மகளுக்காக மீண்டும் சீதாவுடன் இணையப் போகும் பார்த்திபன்!

மகளுக்காக மீண்டும் சீதாவுடன் இணையப் போகும் பார்த்திபன்!

இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் நடிகை சீதாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதிகளுக்கு இரு மகள்கள், ஒரு மகன் இருக்கிறார்கள். இதற்கிடையே, கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து வாங்கிய இவர்கள் பல ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். திருமணத்திற்குப் பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்ட சீதா, விவாகரத்துக்கு பிறகு திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார்.

 

இந்த நிலையில், பார்த்திபனின் மகள் கீர்த்தனாவுக்கு வரும் மார்ச் மாதம் 8ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதற்காக திரையுலகைச் சேர்ந்த பல முக்கிய பிரபலங்களுக்கு பார்த்திபன் நேரில் சென்று பத்திரிகை வைத்து வருகிறார்.

 

மேலும், தனது முன்னாள் மனைவியான சீதாவையும் நேரில் சந்தித்து அவர் பத்திரிகை கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டும் அல்லாமல், திருமண மேடையில் அம்மா ஸ்தானத்தில் சீதா இருக்க வேண்டும், என்று பார்த்திபன் விரும்புவதாகவும், இதற்காக பார்த்திபனும், சீதாவும் மீண்டும் இணையப் போவதாகவும் கூறப்படுகிறது.

 

இது குறித்து பார்த்திபன் மற்றும் சீதா தரப்பில் எந்தவித கருத்தும் தெரிவிக்கப்படவில்லை என்றாலும், இவர்கள் இந்த திருமணத்தால் மீண்டும் இணைவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.