Apr 27, 2021 07:10 AM

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல இயக்குநர் மரணம்!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல இயக்குநர் மரணம்!

கொரோனாவில் இரண்டாம் அலை தமிழகம் உள்ளிட்ட இந்தியாவில் பல மாநிலங்களை உலுக்கு எடுத்து வருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதோடு, உயிர் பலியும் அதிகரித்து வருவது மக்களை பெரும் அச்சமடைய செய்துள்ளது.

 

இந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல தமிழ்த் திரைப்பட இயக்குநர் தாமிரா, இன்று சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

 

இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில், இயக்குநர்கள் பாலச்சந்தர் மற்றும் பாரதிராஜா முதல் முறையாக இணைந்து நடித்த ‘ரெட்டசுழி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான தாமிரா, இயக்குநர் சமுத்திரக்கனி மற்றும் பிக் பாஸ் ரம்யா பாண்டியன் நடித்த ‘ஆண்தேவை’ என்ற படத்தை இயக்கினார்.

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை அசோக் நகரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட இயக்குநர் தாமிராவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவர் இன்று சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

 

இயக்குநர் தாமிராவின் இயற்பெயர் சேக்தாவூத் என்பதாகும். 53 வயதாகும் அவருக்கு பஷிரியா என்ற மனைவியும், முகமது ராஷித், இர்ஷாத், ரிஷ்வான் ஆகிய மூன்று மகன்களும், பவ்ஷியா என்ற ஒரு மகளும் இருக்கிறார்கள்.

 

இயக்குநர் தாமிராவின் உடல் மருத்துவமனையில் இருந்து அவரது சொந்த ஊரான திருநெல்வேலிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு இறுதி சடங்க செய்யப்பட உள்ளது.