பிரபல எடிட்டர் கோபி கிருஷ்ணா தயாரிக்கும் ‘நாயே பேயே’!

‘தனி ஒருவன்’, ‘வழக்கு எண் 18/9’, ‘ஒரு குப்பை கதை’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் எடிட்டராக பணியாற்றிய கோபி கிருஷ்ணா, ‘கட்டிங் ஒட்டிங் ஸ்டுடியோஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். அதன் மூலம், கலை தி ஆர்ட் புரொடக்ஷன்ஸ் டாக்டர்.ரேவதி ரெங்கசாமி, கலையரசி சாத்தப்பன் ஆகியோருடன் இணைந்து தான் தயாரிக்கும் முதல் படத்திற்கு ‘நாயே பேயே’ என்று தலைப்பு வைத்துள்ளார்.
இதில் பிரபல நடன இயக்குநர் தினேஷ் ஹீரோவாக நடிக்கிறார். இவர் ஏற்கனவே ஹீரோவாக நடித்த ‘ஒரு குப்பை கதை’ மிகப்பெரிய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. ஹீரோயினாக ஐஸ்வரியா நடிக்க, இவர்களுடன் ஆடுகளம் முருகதாஸ், ஷாயாஜி ஷிண்டே, ரோகேஷ், கிருஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
இப்படத்தை பல தேசிய விருதுகள் வென்ற குறும்பட இயக்குநர் சக்திவாசன் எழுதி இயக்குகிறார்.
நகரத்தில் வாழும் ஒரு துடிப்பான இளைஞன், மனம் போன போக்கில் தன் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறான். நிரந்தர வேலையில் இல்லாத அவன், அவ்வப்போது சமயோசிதமாக சிறு சிறு திருட்டுகளில் ஈடுபட்டு, அதில் கிடைக்கும் பணத்தில் நண்பர்களுடன் சந்தோஷமாக இருக்கின்றான். இந்த சூழலில், அவனுக்கு பிரம்மாண்டமான ஐடியா உதிக்க, அந்த ஒரே ஒரு ஜாக்பாட் திருட்டுடன், வாழ்க்கையில் செட்டிலாக முடிவு செய்கிறான்.
நாயைக் கடத்தும் நால்வர் தவறுதலாக பேயைக் கடத்திவிடுகின்றனர். பேயை சமாளிக்க முடியாமல் சிக்கித் தவித்து சின்னா பின்னமாவதை நகைச்சுவை கலந்து, ஹாரர் எபெக்ட்டில் சுவாரஸ்யமாகவும், ஜனரஞ்சகமாகவும் இப்படத்தை உருவாக்க இருக்கிறார்களாம்.
நிரன் சந்தர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சுப்பு அழகப்பன் கலையை நிர்மாணிக்க, என்.ஆர்.ரகுநந்தன் இசையமைக்கிறார். தயாரிப்பு பொறுப்புகளுடன் படத்தொகுப்பையும் கோபி கிருஷ்ணா கவனிக்க, நிர்வாக தயாரிப்பை சக்கரத்தாழ்வார் கவனிக்கிறார்.
இன்று பூஜையுடன் தொடங்கிய இப்படத்தின் துவக்க விழாவில் பேரரசு, எழில், எம்.ராஜேஷ், எல்.சுரேஷ், ராபர்ட் ராஜசேகர் உள்ளிட்ட 25 இயக்குநர்கள் கலந்துக்கொண்டு படத்தை துவக்கி வைத்தனர். கோபி கிருஷ்ணாவின் தயாரிப்பு நிறுவனமான கட்டிங் ஒட்டிங் ஸ்டுடியோஸ் நிறுவனத்தை தயாரிப்பாளரும், எடிட்டருமான மோகன் துவக்கி வைத்தார்.