May 03, 2019 07:59 AM

அதர்வாவின் ’100’ ரிலீஸ் தேதி தள்ளிப்போனது ஏன்? - தயாரிப்பாளர் விளக்கம்

அதர்வாவின் ’100’ ரிலீஸ் தேதி தள்ளிப்போனது ஏன்? - தயாரிப்பாளர் விளக்கம்

ஆரா சினிமாஸ் சார்பில் காவியா வேணுகோபால் தயாரிப்பில், சாம் ஆண்டன் இயக்கத்தில், அதர்வா, ஹன்சிகா மோத்வானி ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘100’. சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். 

 

இன்று (மே 3) வெளியாக இருந்த இப்படம், திடீரென்று மே 9 ஆம் தேதிக்கு ரிலீஸ் செய்யப்படுவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 

 

ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்தது குறித்து தயாரிப்பாளர் மகேஷ், கூறுகையில், “ஒவ்வொரு ஹீரோவுக்கும் ஏதாவது ஒரு படம் புதிய பரிமாணத்தை கொடுக்கும். அந்த வகையில் அதர்வாவுக்கு இது அடுத்த கட்ட படமாக இருக்கும். கமெர்சியல் போலீஸ் படத்துக்கு தேவையான அனைத்து அம்சங்களும் இதில் இருக்கும். அவெஞ்சர்ஸ், காஞ்சனா 3 போன்ற படங்கள் மிகச்சிறப்பாக ஓடிக் கொண்டிருக்கின்றன. அதனால் தான் ஒரு வாரம் படத்தை தள்ளி ரிலீஸ் செய்யலாம் என நானும், வினியோகஸ்தர்களும் முடிவெடுத்தோம். இந்த ஒரு பெரிய படம், ரசிகர்களுக்கு சிறப்பான அனுபவத்தை கொடுக்க கொஞ்சம் நல்ல திரையரங்குகளில் வெளியிட வேண்டும் என்ற நோக்கத்தில் அடுத்த வாரம் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம். நிச்சயம் இந்த படம் பேசப்படும்.” என்றார்.

 

படம் குறித்து அதர்வா பேசுகையில், “தமிழ் சினிமாவில் நிறைய போலீஸ் படங்கள் வருகின்றன, அதில் இருந்து இது முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். இது காவல்துறை கட்டுப்பாட்டு அறையின் பின்னணியில் நடக்கும் ஒரு கதை. இந்த மாதிரி ஒரு படத்தில் நடித்தது எனக்கு பெருமையான விஷயம். சாம் ஆண்டன் ஆக்‌ஷன் படங்களை மிகச்சிறப்பாக எடுக்கிறார். அவர் தொடர்ந்து ஆக்‌ஷன் படங்களை இயக்க வேண்டும் என நான் ஆசைப்படுகிறேன். சமூகத்தில் சமகாலத்தில் நடக்கும் விஷயங்களை இந்த படம் பேசும். நிச்சயம் இது என் கேரியரில் முக்கியமான படமாக இருக்கும்.” என்றார்.

 

100 Press Meet

 

இயக்குநர் சாம் ஆண்டன் படம் குறித்து பேசுகையில், “அதர்வா சாரிடம் கதை சொல்ல போன போது என்னை நம்பி சீரியஸான கதையில் நடிக்க ஒப்புக் கொண்டார். கதைக்கு ஏற்ற வகையில் ஒரு மீட்டரில், சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார். தயாரிப்பாளர் மகேஷ் என் கல்லூரி சீனியர். அவர் எனக்கு இந்த படத்தை கொடுத்தார். எந்த தயக்கமும் இல்லாமல் கதைக்கு என்ன தேவையோ எல்லாவற்றையும் கொடுத்தார். அவரும் படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மிக நன்றாகவே நடித்திருக்கிறார். இசையமைப்பாளர் சாம் சிஎஸ் தான் திரில்லர் படம் பண்ணுங்க என ஆரம்பத்திலேயே என்னை ஊக்கப்படுத்தினார். பெண்கள் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக உள்ளது, அதை பேசும் ஒரு படமாக இருக்கும்.” என்றார்.

 

இசையமைப்பாள சாம் சி.எஸ் கூறுகையில், “விக்ரம் வேதா, அடங்க மறு, 100, அயோக்யா என அடுத்தடுத்து போலீஸ் படங்களாக நான் இசையமைத்து வருகிறேன். வெளியில் இருந்து பார்த்தால் எல்லா படங்களும் ஒரே மாதிரியாக தோன்றும். ஆனால் திரைக்கதையில் ஒவ்வொன்றும் வித்தியாசமானது. ஒரு திரைக்கதை தான் பின்னணி இசையை கோரும். எனக்கு காமெடி படங்கள் பண்ணனும்னு ஆசை, சாம் எனக்கு கதை சொல்ல வந்தபோது எனக்கு ஒரு நல்ல காமெடி படம் மாட்டிகிச்சு என சந்தோஷப்பட்டேன். ஆனால் இதுவும் ஒரு போலீஸ் படம், சீரியஸ் படமாகவே இருந்தது. அவர் காமெடியை விட திரில்லர் படங்களை தான் மிகச்சிறப்பாக எடுக்கிறார். அவர் எனக்கு மிகவும் சுதந்திரம் கொடுத்தார். அது தான் என் வேலையை மிகச்சிறப்பாக செய்ய ஊக்கப்படுத்தியது. அதர்வா உடல் உழைப்பு அபாரம். சண்டைக்காட்சிகளில் கலக்கி இருக்கிறார். இது சமூகத்தில் தற்போது நடக்கிற விஷயங்களை பேசும், கண்டிப்பாக இன்றைய காலகட்டத்துக்கு தேவையான ஒரு படம். இந்த படத்தின் பாடல்கள் சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது. நிச்சயம் அனைவருக்கும் பிடித்த ஒரு படமாக அமையும்.” என்றார்.

 

வரும் மே 9 ஆம் தேதி வெளியாகும் ‘100’ படத்தை தமிழகம் முழுவதும் குரு ஸ்ரீ மிஷ்ரி எண்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் சி.எஸ்.பதம்சந்த் ஜெயின் வெளியிடுகிறார்.