May 13, 2021 06:14 AM

மது பிரியர்களுக்கு வேட்டு வைத்த பப்ளிக் ஸ்டார் துரை சுதாகரின் பாட்டு!

மது பிரியர்களுக்கு வேட்டு வைத்த பப்ளிக் ஸ்டார் துரை சுதாகரின் பாட்டு!

‘தப்பாட்டம்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், ‘களவாணி 2’ படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். அப்படத்தை தொடர்ந்து ‘டேனி’, ‘க/பெ.ரணசிங்கம்’ ஆகிய படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து நல்ல நடிகர் என்று பாராட்டு பெற்றார்.

 

நடிப்பதோடு மட்டும் அல்லாமல் திரைப்பட தயாரிப்பிலும் ஈடுபட்டு வரும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், நாயகனாக நடித்திருக்கும் ‘நான் ஒரு முட்டாள்’ படத்தில் ஒரு பாடலை பாடி பின்னணி பாடகர் அவதாரம் எடுத்துள்ளார்.

 

ஏ.ஜே.அலிமிர்ஷா இசையமைப்பில் உருவாகியுள்ள ‘நான் ஒரு முட்டாள்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள “குடியின் மவன் நான் குடிமகன்...விஸ்கி பிராந்தி சீரு கேட்கும் மருமகன்...” என்று தொடங்கும் பாடலை நடிகர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் பாடியிருக்கிறார். இப்பாடலின் லிரிக்கல் வீடியோ நேற்று யூடியுப் தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.

 

இப்படால் குறித்து நடிகர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகரிடம் கேட்டதற்கு, “தற்போதைய காலக்கட்டத்தில் உள்ள ஒரு குடும்ப தலைவனின் வாழ்க்கையை மையப்படுத்திய படமாக ‘நான் ஒரு முட்டாள்’ படம் உருவாகிறது. மது பழக்கத்திற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதோடு, மதுவினால் ஏற்படும் உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

 

மது நாட்டுக்கும், வீட்டுக்கும் கேடு, என்று மது பாட்டில்களில் எழுதி வைத்திருந்தாலும் கூட, மது அருந்துவதை ஒரு கலாச்சாரமாகவே பார்க்கும் இன்றைய தலைமுறை சிறு வயதில் பல உளவியல் பிரச்சனைகளை சந்திப்பதோடு, தங்களது உடல் உறுப்புகளையும் இழந்து விடுகிறார்கள். 

 

மேலும், புதிய குடிநோயாளிகள் அதிகம் உருவாகும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் மாறி வரும் சூழலும் உருவாகியுள்ளது. இப்படி மதுவால் ஒரு மாநிலத்தின் இளைஞர் சமுதாயமே அழிவை நோக்கி சென்றுக்கொண்டிருந்தாலும், இதன் தீமைகளை எடுத்துச் சொல்லும் போதிய விழிப்புணர்வு இங்கு இல்லை என்பது வருந்தக்கூடிய ஒன்றாக இருக்கிறது.

 

இவைகளை பார்த்து வருந்திக்கொண்டு இருந்தால் எதுவும் சரியாகிவிடாது, நம்மால் முடிந்ததை செய்ய வேண்டும், என்று யோசித்தேன். அதனால் தான் குடியினால் ஏற்படும் தீமைகளை, அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் வகையில் கமர்ஷியல் படமாக எடுத்திருக்கிறோம்.

 

படத்தின் கருவை சொல்லும் பாடலாக அமைந்திருக்கும் இந்த பாடல் மிக பிரம்மாண்டமான முறையில் படமாக்கியிருக்கிறோம். தற்போது பாடலின் லிரிக்கல் வீடியோவை வெளியிட்டுள்ளோம். லிரிக்கல் வீடியோ வெளியான சில மணி நேரங்களிலேயே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.” என்றார்.

 

 

சரவண சுப்பையாக இயக்கத்தில் உருவாகி விரைவில் வெளியாக இருக்கும் ‘மீண்டும்’ படத்தில் மிக முக்கியமான வேடத்தில் நடித்திருக்கும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், இயக்குநர் எழிழ், சற்குணம் உள்ளிட்ட முன்னணி இயக்குநர்களின் படங்களில் நடித்து வருகிறார்.