தாய், தந்தையரைக் காக்க புது அமைப்பு! - நடிகர் ராகவா லாரன்ஸ் தொடங்குகிறார்

‘காஞ்சனா 3’ படத்தின் கலெக்ஷன் மூலம் விஜய், ரஜினி போன்ற மாஸ் ஹீரோக்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் ராகவா லாரன்ஸ், தற்போது ‘காஞ்சனா’ படத்தை இந்தியில் ரீமேக் செய்து வருகிறார். இப்படத்திற்குப் பிறகு ரூ.100 கோடி பட்ஜெட்டில் ‘காஞ்சனா 4’ எடுக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இப்படி சினிமாவில் பிஸியாக வலம் வருபவர் சமூக சேவையில் ஈடுபட்டு வருவது அனைவரும் அறிந்த ஒன்று தான். மேலும், தனது அம்மாவுக்காக கோயில் கட்டிய ராகவா லாரன்ஸ், தாய், தந்தையரைக் காப்பதற்காக ‘தாய்’ என்ற புது அமைப்பையும் தொடங்க இருக்கிறார்.
கல்மனம் படைத்தவர்கள் சிலரால் பெற்ற தாய்கள், அனாதை இல்லங்களிலும், சாலை ஓரங்களிலும், குப்பை மேடுகளிலும் குடியிருக்கும் அவலங்கள் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டிருக்கிறது. தனது ரத்தத்தை பாலாக கொடுத்து வளர்த்த தாயை, வளர்த்ததும் பட்டினியால் வதைக்கவும் செய்கிறார்கள். இவர்களை போன்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுத்தி ஈன்றெடுத்த தெய்வங்களை அவர்களின் இறுதி காலம்வரை கண் கலங்காமல் வைத்து காப்பாற்றிட வேண்டும், எண்ணத்தை வளர்ப்பதற்காக பல அமைப்புகள் இருந்தாலும், அன்றாடம் ஆலோசனை வழங்கி அவர்களின் மன அழுத்தத்தைப் போக்குவதற்கும், பாதிப்பில் இருந்து விடுபடுவதற்கும் வழிவகை செய்யும் நோக்கோத்தோடு ‘தாய்’ எனும் விழிப்புணர்வு சேவையைத் தொடங்கி, தமிழகம் முழுவதும் அதைப் பரப்பவும் லாரன்ஸ் முடிவு செய்திருக்கிறார்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு முதியோர் இல்லத்திற்கு சென்றார் ராகவா லாரன்ஸ். அங்கு ஒரு மூதாட்டி இவரைப் பார்த்ததும் என் மகன் வந்துவிட்டான் என்று ஓடி வந்து கட்டி பிடித்திருக்கிறார். இதைப் பார்த்ததும் நம்மை பார்த்த மகிழ்ச்சியில் இப்படி செய்கிறார் என்று நினைத்திருக்கிறார். அடுத்து வேறொருவர் வந்திருக்கிறார். அவரைப் பார்த்தும் அந்த மூதாட்டியும் அதேபோல் கட்டிபிடித்திருக்கிறார். இதைப் பார்த்து அங்கிருந்த ஒருவர், இவர்களை இங்கு விட்டுச்சென்ற பிள்ளைகள் அவர்களைப் பார்ப்பதற்கு கூட வருவதில்லை. அதன் விளைவாக யாரைப் பார்த்தாலும் தங்கள் மகன் வந்துவிட்டான் என்று கட்டி பிடித்து தற்காலிகமாக சந்தோசப்பட்டுக் கொள்கிறார் என்று கூறியிருக்கிறார். இதைக் கேட்ட ராகவா லாரன்ஸ் அவர்களின் மனதிற்குள் எவ்வளவு வலி இருந்திருந்தால் இப்படி நடந்து கொள்வார்கள். இந்த சம்பவத்தின் பாதிப்பே இந்த அமைப்பு உருவாகிட காரணமாக இருந்தது. இனிமேல் இதுபோல் யாரும் தங்கள் பெற்றோர்களை விட்டுவிடக்கூடாது என்பதற்காகவும் இந்த அமைப்பை உருவாக்கியிருக்கிறார் ராகவா லாரன்ஸ்.
இனி எந்த ஒரு தாய் தந்தையும் முதியோர் இல்லத்திற்குச் சென்று விட கூடாது. ஏற்கனவே விடபட்டிருந்தால், திரும்ப வரவழைத்து கோவில் தெய்வம் போல வணங்குவோம்.
அதற்கான முன்னோட்டமாக ஒரு பாடலை உருவாக்கியிருக்கிறார் ராகவா லாரன்ஸ். இன்னும் சில நாட்களில் அப்பாடலுக்கு அவரே நடனம் அமைத்து வீடியோவாக வெளியிடவுள்ளார். இப்பாடல் வருகிற மே 12ஆம் தேதி அன்னையர் தினத்தன்று வெளியாகும்.