Apr 25, 2021 08:19 AM

”பணத்திற்காக தவறான சிகிச்சை செய்தவரை சும்மா விட மாட்டேன்” - ரைசா பதிலடி

”பணத்திற்காக தவறான சிகிச்சை செய்தவரை சும்மா விட மாட்டேன்” - ரைசா பதிலடி

தோல் சிகிச்சை மருத்துவர் பைரவி செந்தில் நடத்தும் தோல் சிகிச்சை மருத்துவமனையில், தனது முகத்தை கூடுதல் அழகுப்படுத்துவதற்காக பிக் பாஸ் ரைசா, சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்துக் கொண்டார். அந்த அறுவை சிகிச்சையால் அவரடைய முகத்தில் வீக்கம் ஏற்பட்டதோடு, இரத்த கசிவும் ஏற்பட்டது.

 

இதையடுத்து, அவர் மருத்துவர் பைரவி செந்திலை தொடர்பு கொண்டபோது, அவர் ரைசாவுக்கு எந்த ஒரு உதவியும் செய்யவில்லையாம். இதனால், தனது நிலை குறித்து சமூக வலைதளம் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்திய ரைசா, மருத்துவர் பைரவி செந்திலின் தவறான சிகிச்சை பற்றியும் மக்களிடம் பரப்புரை செய்து வந்தார்.

 

மேலும், மருத்துவர் பைரவி செந்திலின் தவறான சிகிச்சை தொடர்பாக மருத்துவ கவுன்சிலிடம் புகார் தெரிவித்திருப்பவர், வழக்கறிஞர் மூலம் நஷ்ட ஈடாக ரூ.1 கோடி கேட்டு வழக்கும் தொடர்ந்துள்ளார்.

 

ரைசாவின் இத்தகைய நடவடிக்கைக்கு பதிலளித்த மருத்துவர் பைரவி செந்தில், தோல் சிகிச்சையில் இப்படி ஏற்படுவது வழக்கமான ஒன்று தான். ஆனால், அதை புரிந்து கொள்ளாமல் ரைசா தன் மீது தவறான கருத்துக்களை பரப்பி வருவதாக கூறியதோடு, ரைசா தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லை என்றால், அவர் மீது மான நஷ்ட வழக்கு தொடர்வேன், என்று எச்சரித்தார்.

 

இந்த நிலையில், மருத்துவர் பைரவி செந்திலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரைசா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”மருத்துவர்கள் போலியான விளம்பரங்கள் மூலம் அப்பாவி மக்களின் பணத்தைக் கொள்ளையடிக்காமல், பொதுமக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் சேவை செய்வதாக நினைக்கிறேன். மேலும், மருத்துவத்துறை விதிமுறைகளை மீறி மக்களுக்கு மருந்து பரிந்துரைத்து பணத்தைக் கொள்ளையடிக்கும் மருத்துவர்களின் செயல்கள் சட்டவிரோதமானவை.

 

முக்கியமாக, சிகிச்சை தரும் நோயாளியின் அவசரச் சூழலில் உதவி கோரும்போது அதைப் புறக்கணிக்காமல் பதிலளிக்க வேண்டும்.

 

டாக்டர் பைரவி செந்தில் பல்வேறு சமூக வலைதளங்களில் விடுத்திருந்த விளம்பரங்களை வைத்தே, அழகை மேம்படுத்துவதற்கான குறிப்பிட்ட சில சிகிச்சைகளை செய்துகொள்ள அவரை நான் அணுகினேன். ஆனால், ஆரம்பத்தில் இருந்தே டாக்டர் பைரவி செந்திலும் அவரது பணியாளர்களும் என்னிடமிருந்து பணம் பிடுங்க எனக்குத் தவறான சிகிச்சைகளையே செய்து வந்தனர்.

 

அந்த சிகிச்சையால் என் உயிருக்கே ஆபத்து நேர்ந்தபோது டாக்டர் பைரவி செந்தில் எனக்கு அவசர சிகிச்சை அளிக்க மறுத்தார். மருத்துவர் ஆய்வு செய்தது உள்ளிட்ட என்னிடம் இருக்கும் ஆதாரங்களை வைத்துப் பார்த்தால் டாக்டர் பைரவி செந்திலின் தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்டிருக்கும் நபர் நான் என்பது தெளிவாகத் தெரியும். எனவே நான் மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை.

 

டாக்டர் பைரவி செந்தில் மற்றும் அவரது ஊழியர்களின் அலட்சியமான போக்கால் பாதிக்கப்பட்ட பெண் நான். எதிர்காலத்தில் யாரும் எனது வலியை அனுபவிக்கக் கூடாது. ஒரு நடிகையாக, எனது செயல்களால் சமூகத்தில் ஏற்படும் தாக்கத்துக்கு நான் பொறுப்பு என நினைக்கிறேன்.

 

எனவே, இனி அப்பாவி மக்கள் யாரும் டாக்டர் பைரவி செந்திலின் சிகிச்சையால் பாதிக்கப்படக் கூடாது என்பதை உறுதி செய்ய, தேசிய மருத்துவ ஆணையத்திடமும், தமிழக மருத்துவ கவுன்சிலிலும், டாக்டர் பைரவி செந்தில் மற்றும் மற்றவர்களுக்கு எதிராக நான் புகார் அளித்துள்ளேன். அவர்களிடம் சட்டப்படி விசாரணை நடத்தப்படும். இந்த விசாரணைக்குப் பின் அதிகாரிகளின் முடிவு தெரியவரும்.

 

கடைசியாக, தவறான சிகிச்சைக்காக டாக்டர் பைரவி செந்திலிடம் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு சட்டபூர்வமாக நடவடிக்கை எடுத்திருக்கிறேன். இந்தச் சட்ட நடவடிக்கையில் எனக்குக் கிடைக்கும் நஷ்ட ஈட்டை, மருத்துவ சிகிச்சையில் ஏற்பட்ட அலட்சியத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நன்கொடையாக அளிக்கவிருக்கிறேன்.

 

கடவுள் மற்றும் நமது நீதித்துறையின் மீதிருக்கும் நம்பிக்கையுடன், மக்களுக்கு என்றுமே சிறந்த மருத்துவ சேவைகள் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன்.” என்றார்.