Mar 05, 2020 06:57 PM

கூட்டு குடும்பத்தின் பெருமையையும், அவசியத்தையும் சொல்லும் ‘ராஜவம்சம்’!

கூட்டு குடும்பத்தின் பெருமையையும், அவசியத்தையும் சொல்லும் ‘ராஜவம்சம்’!

திருமணமானவுடன், பெண்கள் குடும்பத்தை விட்டு பிரிவதையே ஏற்றுக்கொள்ள மறுக்கும் மக்கள், தற்போது ஆண் பிள்ளைகள் பெற்றோர்களை பிரிந்து செல்வதை ஏற்றுக்கொண்டு வாழ தொடங்கி விட்டார்கள். அந்த அளவுக்கு குடும்பங்கள் பிளவுப்படுவதை மக்கள் எளிதாக ஏற்றுக்கொள்ளகூடிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் தற்போதைய சூழலில், கூட்டு குடும்பத்தின் பெருமையை மட்டும் இன்றி அவசியத்தையும் சொல்லும் படமாக ‘ராஜவம்சம்’ உருவாகியிருக்கிறது.

 

செந்தூர் பிலிம் இண்டர்நேஷ்னல் சார்பில் டி.டி.ராஜா தயாரித்திருக்கும் இப்படத்தில் சசிகுமார் ஹீரோவாக நடிக்க, நிக்கி கல்ராணி ஹீரோயினாக நடித்திருக்கிறார். அறிமுக இயக்குநர் கதிவேலு எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வு இன்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.

 

தயாரிப்பாளர் டி.டி.ராஜா பேசுகையில், “இயக்குநர் கதை சொன்னதும் படம் பண்ண ஹீரோவிடம் டேட் கேட்டோம். அவரும் உடனே டேட் கொடுத்தார். அடுத்து இவ்வளவு நடிகர்களை வைத்து எப்படி  படம் எடுப்பது என்று யோசித்தேன். ஆனால் இயக்குநர் “சார் எடுத்துவிடலாம் சார்” என்று நம்பிக்கையாகச் சொன்னார். இந்தப்படத்தில் ஹீரோவாக சசிகுமார் நடிக்கிறார் என்றவுடன் மற்ற அனைத்து  நடிகர்களும் யோசிக்காமல் டேட் கொடுத்தார்கள். இப்படத்தில் ஒத்துழைத்து கொடுத்து நடித்தவர்களுக்கும், பணியாற்றியவர்களுக்கு என் நன்றி” என்றார்.

 

சசிகுமார் பேசுகையில் “ராஜவம்சம் கூட்டுக் குடும்பத்தைப் பற்றிச் சொல்ற படம். அதைக் குடும்பமாகப் பார்க்கும் போது நம்ம எல்லாருக்கும் பிடிக்கும். நாற்பது நடிகர்கள் இருக்கிற படம்னா பட்ஜெட் ஜாஸ்தியாக இருக்குமே என்று நினைத்தோம். ஆனால் தயாரிப்பாளர் ராஜா சார் ரொம்ப நம்பிக்கையாக இருந்தார். இந்தப்படம் ஒரு நல்ல பீல் குட் படமாக இருக்கும். பெரிய பெரிய சீனியர் நடிகர்களோடு நடித்தது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இவ்ளோ பேரையும் ஆண்டில் பண்ணிய கதிரும் கேமராமேனும் பாராட்டுக்குரியவர்கள். பர்ஸ்ட் இந்த டீம் பார்ம் ஆகுறதுக்குள் கொஞ்சம் சிரமமாக இருந்தது. பின் போகப்போக சரியாகிவிட்டது. இந்தப்படத்தில் எல்லாருமே அழகாக இருக்கிறார்கள். சினிமாவிலும் நாம் ஒரு குடும்பமாகத் தான் இருக்க வேண்டும்” என்றார்.

 

Rajavamsam

 

நடிகர் ராதாரவி பேசுகையில், “விழாவில் இருக்கும் அத்தனை பேருக்கும் என் வணக்கம். ராதாரவி பேசினால் சர்ச்சை என்கிறார்கள். என் பேச்சு புரியாதவர்களுக்குத் தான் சர்ச்சை. இந்தச் சகோதரர் கதிர்வேலு ரொம்பப் போராடி வந்திருக்கிறார். தயாரிப்பாளரை நான் இன்று தான் பார்க்கிறேன். சசிகுமார் தான் இந்தப்படத்தின் தயாரிப்பாளர். ரொம்ப தங்கமான பிள்ளை. இப்ப நிறைய நடிகர்கள் பாடிகாடோடு வருகிறார்கள். சசிகுமார் ரொம்ப எளிமையாக இருக்கிறார். கேமராமேன் எங்களை போகஸ் பண்ணவே இல்லை. கேமராவுக்கு முன் யார் வருகிறார்களோ அவர்களை எடுத்துக் கொண்டார். இந்தக் கூட்டத்தில் ரொம்ப கஷ்டப்பட்டு நடித்தேன். ஆனால் சந்தோஷமாக நடித்தேன்.

 

சசிகுமாருக்கு இது செகண்ட் லைப் என்றார்கள். அவருக்கு இப்போது இருப்பதே நயிஷ் லைப் தான். நிக்கி கல்ராணி நல்லா நடிச்சிருக்கு. அவருக்கு எல்லாக் கேரக்டருக்கும் பொருத்தமான நடிகை. அவருக்கு எல்லா மொழியும் தெரியும் என்றார்கள். அது நல்ல விசயம். நானும் இந்தி கற்றிருந்தால் இன்னைக்கு அங்கே எனக்குப் பெரிய இடம் கிடைத்திருக்கும். இந்தப்படத்தை குடும்பத்தோடு வந்து பாருங்கள்” என்றார்.

 

இயக்குநர் கதிர்வேலு பேசுகையில், “சசிகுமார் சார் கதையைக் கேட்டுட்டு ரொம்ப நல்லாருக்குடா என்றார். தயாரிப்பாளரும் கதை கேட்ட உடனே என்னை கமிட் செய்தார். இந்தப்படம் இன்னைக்கு இப்படியொரு ஸ்டேஜ்ல இருக்கான்னா அதுக்கு முழு முதல் காரணம் ராஜா சார். நான் யோசிச்ச விசயத்தை ஸ்கிரீன்ல கொண்டு வர ராஜா சார் ரொம்ப சப்போர்ட் பண்ணார். என்னோட ஆர்டிஸ்ட் எல்லாரும் நன்றாக உதவி செய்தார்கள். யாரும் என்னிடம் கதையே கேட்கவில்லை.  சசிகுமார் நிக்கி கல்ராணி இருவரிடம் மட்டும் தான் முழுக்கதையையும் சொன்னேன். கேமராமேன் எனக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணார். அப்படியே தான் எடிட்டரும். சாம் சி எஸ் என் டார்லிங். அடங்கமறு இயக்குநர் கார்த்திக் தான் சாம் சி எஸ்ஸை அறிமுகப்படுத்தி வைத்தார். அவர் பக்காவாக பி.ஜி எம் போட்டிருக்கார். இந்தப்படம் ரொம்ப ரொம்ப நல்ல படம். அனைவரும் சப்போர்ட் பண்ணுங்க” என்றார்.