Jan 03, 2020 05:49 AM

மது பாட்டிலில் ரஜினி புகைப்படம்! - டிவி சேனல் மீது ரசிகர்கள் கோபம்

மது பாட்டிலில் ரஜினி புகைப்படம்! - டிவி சேனல் மீது ரசிகர்கள் கோபம்

தமிழ் சினிமா மட்டும் இன்றி இந்திய சினிமாவின் உச்ச நடிகராக உயர்ந்திருக்கும் ரஜினிகாந்த், விரைவில் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது கட்சிக்கான நிர்வாகிகள் தேர்வு உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் ரஜினிகாந்தின் அரசியல் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

 

இதனால் ரஜினிகாந்த் எது செய்தாலும் அதை அரசியல் கண்ணோட்டத்துடன் தான் பார்க்கப்படுகிறது. அதனால், அவரும் அவரது மன்ற நிர்வாகிகளும் கவனத்துடன் இருக்க, அவரை கெளரவப்படுத்துகிறேன் என்று கூறி, பிரபல டிவி சேனல் ஒன்று அசிங்கப்படுத்தியிருக்கிறது.

 

ஆம், ஜீ தமிழ் தொலைக்காட்சி முதல் முறையாக திரை விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியை நடத்த இருக்கிறது. ‘ஜீ சினி அவார்ட்ஸ் தமிழ் 2020’ என்ற தலைப்பில் வரும் ஜனவரி 4 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ள இந்த விருது வழங்கும் விழாவுக்கான அழைப்பிதழை ஜீ தமிழ் டிவி நிர்வாகம் தற்போது ஊடகம், திரை பிரபலங்கள்உள்ளிட்டவர்களுக்கு வழங்கி வருகிறது.

 

இந்த அழைப்பிதழில் தமிழ் சினிமாவைச் சேர்ந்த முக்கிய நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் ஆகியோரை கெளரவிக்கும் விதமாக அவர்களது உருவம் பதித்த சில பொருட்களை அழைப்பிதழ் உடன் சேர்த்து வழங்கியுள்ளது.

 

அதில், பீர் பாட்டில் ஒன்றுக்கு வண்ணம் தீட்டி, அதில் ரஜினியின் புகைப்படத்தை ஒட்டியுள்ளார்கள். இதனைப் பார்த்த பலர் கோபமடைந்திருக்கிறார்கள். காரணம், ”மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு”, என்று ஒரு பக்கம் விழிப்புணர்வு பிரசாரம் செய்யும் நிலையில், அந்த விழிப்புணர்வு பிரசாரத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டிய ஊடகமான ஜீ தமிழ் தொலைக்காட்சியே இப்படி மது பாட்டிலை ஒரு பரிசாக கொடுத்திருப்பது எவ்வளவு பெரிய முட்டாள் தனம்.

 

Zee Cine Awards Tamil 2020

 

ரஜினியின் உருவப்படத்தை போடுவதற்கு வேறு எந்த பொருளும் கிடைக்கவில்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ள அவரது ரசிகர்கள், ஜீ தமிழ் மீது கடும் கோபமடைந்திருக்கிறார்கள்.

 

பொதுவாக, இது போன்ற விழா அழைப்பிதழ்களை, இப்படி பலவித பரிசு பொருட்களுடன் கொடுப்பதற்கு காரணம், அதை பெறுபவர்கள் அதை தங்களது இல்லத்தில் நிரந்தரமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு தான். ஆனால், ஜீ தமிழ் கொடுத்திருக்கும் இந்த பரிசு பொருட்களில், அந்த பீர் பாட்டிலை குப்பையில் போட்ட பிறகு, மற்ற பொருட்களை பார்க்கவே தோன்றவில்லை.

 

பெரிய அட்டைப் பெட்டியில், ஏதோ பிரம்மாண்டமான பரிசுப் போல பாவித்து வழங்கியிருக்கும் ஜீ தமிழ் தொலைக்காட்சி, தங்களது கற்பனை மற்றவர்களுக்கு பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும், என்று யோசித்திருந்தால் அவர்களின் இந்த அழைப்பிதழ் பரிசு, அனைவரது இல்லத்தையும் அலங்கரித்திருக்கும். ஆனால், தற்போது தெருக்களில் இருக்கும் குப்பைத் தொட்டிகளில் தான் அவை சென்றுக் கொண்டிருக்கிறது, என்பது நமக்கே சற்று கஷ்ட்டமாக தான் இருக்கிறது.

 

Zee Cine Awards Tamil 2020

 

இதே ரஜினிகாந்தின் ‘கபாலி’ படத்தின் போது தயாரிப்பு தரப்பில் இருந்து ஒரு பரிசு பெட்டி வழங்கப்பட்டது. அதில், ரஜினியின் உருவ பொம்மை, வெள்ளி நாணயம், டி-ஷர்ட் போன்றவை இருந்தது. இப்போதும் அந்த ரஜினி பொம்மையை சிறுவர்கள் வைத்துக்கொண்டு ”கபாலி பொம்மை...கபாலி பொம்மை..” என்று கூறி விளையாடி வருகிறார்கள். அப்படி அனைவரிடத்திலும் சேர வேண்டிய வகையில், கிரியேட்டிவிட்டி என்பது இருக்க வேண்டுமே தவிர, பார்த்தவுடன் கோபம் வரும்படியாகவும், வெளியே தூக்கி வீச வேண்டும், என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் விதமாகவும் இருக்க கூடாது, என்பது அந்த அழைப்பிதழை பெற்றவர்களின் எண்ணமாகும்.

 

அழைப்பிதழிலேயே ஜீ தமிழ் தொலைக்காட்சியின் கிரியேட்டிவிட்டி இப்படி விமர்சிக்கும்படி இருக்கிறது என்றால், அவர்கள் நடத்தப் போகும் விருது விழா எப்படி இருக்குமோ!