ரஜினிகாந்தின் 15 வருட முயற்சி!

ரஜினிகாந்தின் ‘தர்பார்’ வரும் ஜனவரி 9 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. தற்போது பட புரோமோஷன் பணிகளில் ரஜினிகாந்த், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட படக்குழுவினர் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
நேற்று ஐதராபாத்தில் நடைபெற்ற ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த், வில்லனாக நடித்திருக்கும் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், தயாரிப்பாளர் சுபாஷ்கரன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், “தர்பார் படம் வெற்றி பெறும் என்று அனைவருக்கும் தெரிந்துவிட்டது. அதனால் தான் இந்த விழா இங்கு பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.
இப்போது எனக்கு 70 வயதாகிறது, இந்த வயதிலும் எப்படி சுறுசுறுப்பாக இருக்கிறீர்கள்? என்று என்னிடம் கேட்க்கிறார்கள்.
அதற்கு நான் சொல்லும் பதில் ஒன்றுதான். கொஞ்சமாக ஆசைப்படுங்கள், கொஞ்சமாக சாப்பிடுங்கள், கொஞ்சமாக உடற்பயிற்சி செய்யுங்கள், கொஞ்சமாக தூங்குங்கள், கொஞ்சமாக பேசுங்கள். இதுதான் எனது சுறுசுறுப்புக்கு காரணம்.
தமிழ்நாட்டில் ரசிகர்கள் என்மீது எந்த அளவுக்கு அன்பு காட்டுகிறார்களோ, அதே அளவுக்கு தெலுங்கு ரசிகர்களும் அன்பு காட்டுவதை எனது பாக்கியம் என்றுதான் சொல்ல வேண்டும். தெலுங்கு மக்கள் சினிமா பிரியர்கள். என்னை ஆதரிக்கிறீர்கள்.
தமிழில் நான் நடித்து வெற்றி பெற்ற படங்கள் தெலுங்கிலும் ரிலீசாகி வெற்றி பெற்றுள்ளன. அந்த படங்கள் நன்றாக இருக்கிறது என்று நீங்கள் பார்த்தாலும், ரஜினி இருக்கிறார் என்பதற்காகவும் பார்க்கிறீர்கள். இதற்காக உங்களுக்கு நன்றி.
15 வருடமாக ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிக்க வேண்டும் என்று முயற்சி செய்தேன். இப்போதுதான் அது நடந்து இருக்கிறது.
படப்பிடிப்பு நடக்கும்போதே ஒரு மேஜிக் நடக்க வேண்டும், அது தர்பார் படத்தில் நடந்துவிட்டது. இந்த படம் அதிரடி திரில்லர் படமாக தயாராகி இருக்கிறது.” என்று தெரிவித்தார்.