Feb 23, 2018 09:59 AM

அரசியல் பொதுக் கூட்டம் பற்றி ரஜினிகாந்த் அறிவிப்பு!

அரசியல் பொதுக் கூட்டம் பற்றி ரஜினிகாந்த் அறிவிப்பு!

கமல்ஹாசன் கட்சியையும் தொடங்கி பொதுக்கூட்டத்தையும் நடத்தி முடித்துவிட்ட நிலையில், ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதற்கான கட்டமைப்பில் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளார். மாவட்டம் வாரியாக நிர்வாகிகளை நிர்வகித்து வரும் அவர், இன்று நெல்லை மாவட்ட நிர்வாகிகள் நியமனம் தொடர்பான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.

 

சென்னை, கோடம்பாக்கம் ராகவேந்திர கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற இந்த பேச்சு வார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், அவர்களது கேள்விகளுக்கு பதில் அளித்தார். அனைத்துக்கட்சி கூட்டம்  குறித்து கேட்டபோது, காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தியது வரவேற்கத்தக்கது என்றார் ரஜினி. 

 

கமலின் அரசியல் பயணம் குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர், :நானும் கமலும் வேறு வேறு பாதையில் சென்றாலும், எங்களின் நோக்கம் மக்களுக்கு நல்லது செய்வதே. கமலின் அரசியல் பொதுக்கூட்டம் நன்றாக இருந்தது. முழுவதும் பார்த்தேன்.” என்றவரிடம், எப்போது கமலை போல பொதுக்கூட்டம் நடத்தப்போகிறீர்கள், என்று கேட்டதற்கு, “இன்று நெல்லை மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினேன். இதேபோல் தனித்தனியாக ஒவ்வொரு மாவட்டமாக நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு, கட்டமைப்பு பணிகள் முடிந்ததும் அடுத்தக்கட்ட முடிவு பற்றி அறிவிப்பேன்.” என்றார்.