ரஜினிகாந்த் திடீர் இமயமலை பயணம்!
தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ள ரஜினிகாந்த், தமிழக முதல்வராக தான் வந்தால் சிறந்த ஆட்சியை நடத்துவேன், என்றும் தனக்கு அரசியல் நன்றாகவே தெரியும், என்றும் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசி தனது ஆசையை வெளிக்காட்டினார்.
ரஜினிகாந்தின் பேச்சு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் இன்று திடீரென்று இமயமலைக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
சென்னையில் இருந்து விமானத்தில் இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவுக்கு செல்லும் அவர் அங்கிருந்து தர்மசாலா, உத்தரகாண்டில் உள்ள ரிஷிகேஷ் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார்.
இந்த பயணத்தின் போது முக்கிய ஆன்மீக வழிகாட்டிகள், குருமார்களை சந்தித்து ரஜினி ஆசிபெறுகிறார். ரிஷிகேஷில் பாபாஜி ஆசிரமம் ஒன்றை ரஜினி கட்டியுள்ளார். கடந்த நவம்பர் மாதம் அதன் திறப்பு விழா நடந்தது. சினிமா படப்பிடிப்பு வேலைகள், தொடர்மழை காரணமாக பாபாஜி ஆசிரமம் திறப்பு விழாவில் ரஜினி பங்கேற்கவில்லை. எனவே இந்த சுற்றுப்பயணத்தின் போது பாபாஜி ஆசிரமத்துக்கு ரஜினி செல்கிறார். அங்கு நடைபெற்று வரும் ஆசிரம விரிவாக்க பணிகளையும் பார்வையிடுகிறார்.
இமயமலையில் 10 அல்லது 15 நாட்கள் தங்க திட்டமிட்டுள்ள ரஜினிகாந்த், அரசியல் இயக்கம் தொடங்குவது குறித்து முடிவெடுத்த பிறகு இமயமலைக்கு செல்வது இது தான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.