Dec 07, 2022 07:30 PM

மணிரத்னம், வெற்றிமாறன் ஆகியோரை தாண்டி இந்த கதை எனக்கு கிடைத்தது - ‘ரத்தசாட்சி’ இயக்குநர் நெகிழ்ச்சி

மணிரத்னம், வெற்றிமாறன் ஆகியோரை தாண்டி இந்த கதை எனக்கு கிடைத்தது - ‘ரத்தசாட்சி’ இயக்குநர் நெகிழ்ச்சி

இலக்கிய எழுத்தாளர் ஜெயமோகனின் கைதிகள் சிறுகதையை தழுவி உருவாகியிருக்கும் திரைப்படம் ‘ரத்தசாட்சி’. ஆஹா தமிழ் ஒடிடி மற்றும் மகிழ் மன்றம் தயாரித்துள்ள இப்படத்தை ரஃபிக் இஸ்மாயில் இயக்கியுள்ளார்.

 

மனதை கலங்க வைக்கும் படைப்பாக உருவாகியுள்ள இதில் ‘மண்டேலா’, ‘கைதி’, ‘சானி காகிதம்’ உள்ளிட்ட பல படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்திருக்கும் கண்ணா ரவி நாயகனாக நடிக்க, இளங்கோ குமார்வேல், கல்யாண் மாஸ்டர், மெட்ராஸ் வினோத், ஆறு பாலா, வினோத் முன்னா, அர்ஜுன் ராம், ஓ.ஏ.கே.சுந்தர், பிரவீன், ஹரிஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

 

வரும் டிசம்பர் 9 ஆம் தேதி ஆஹா தமிழ் ஒடிடி தளத்தில் நேரடியாக வெளியாக உள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக்கொண்டு படம் குறித்து பேசினார்கள். 

 

இயக்குநர் ரஃபிக் இஸ்மாயில் படம் குறித்து கூறுகையில், “ஜெயமோகன் சார் இந்த கதையை கொடுக்கவில்லை என்றால் என்னால் சினிமா எடுத்து இருக்க முடியுமா என்று தெரியவில்லை. மணிரத்னம் மற்றும் வெற்றிமாறன் இந்தக்கதையை படமாக செய்ய ஆசைப்பட்டார்கள். அவர் பலரை தாண்டி எனக்கு இந்த கதையை கொடுத்தார். பல தயாரிப்பாளர்களை தாண்டி ஆஹாவின் அல்லு அரவிந்த் சாரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவருக்கு கதை கூறிய பிறகு தான் இந்தப்படம் ஆரம்பித்தது. கதையில் இருக்கும் கதாபாத்திரங்களை ஒத்து போகும் நடிகர்களை  தேர்ந்தெடுத்து நடிக்க வைத்திருக்கிறோம். நடிகர்கள் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர்.  ஒளிப்பதிவாளர் உடைய பணி இந்த கதையை மேம்படுத்தி இருக்கிறது. இசையமைப்பாளர் உடைய பங்கு கதையின் போக்குடன் ஒத்து போயுள்ளது.  இந்த படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.” 

 

நடிகர் கண்ணா ரவி கூறுகையில், “இது எனக்கு மிகவும் உணர்ச்சிகரமான தருணம். இந்தப்படத்தில் மிகவும் சவால் மிகுந்த முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளேன். ஜெயமோகன் சாரின் இந்தக்கதை அட்டகாசமானது. அதை இயக்குநர் ரஃபீக் இஸ்மாயில் திரையில் கொண்டு வந்த விதம் பிரமிப்பானது. இப்படத்தில் எனக்கு ஒத்துழைத்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், இந்நேரத்தில் நன்றி கூறிக்கொள்கிறேன். இப்படத்தை எடுக்க ஒப்புகொண்ட அல்லு அரவிந்த் சாருக்கு நன்றி. இப்படம் கண்டிப்பாக உங்கள் அனைவரையும் கவரும்.” என்றார்.

 

இசையமைப்பாளர் ஜாவத் ரியாஸ்  கூறுகையில், “இந்த வாய்ப்பை கொடுத்த இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் எனது நன்றிகள். இந்த படம் எனது மனதுக்கு நெருக்கமான படமாக மாறியது. இந்த படத்தை மெருகேற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று கொண்டே இருந்தது. ஆனால் அது எங்களை எந்த வகையிலும் சோர்வாக்கவில்லை. இந்தப் படத்தில் ஒரு ஆன்மா இருக்கிறது. கதையிலும் இந்த ஆன்மா இருக்கிறது, அது  படத்திலும் வந்து இருக்கிறது , அதற்கு தொழில்நுட்ப கலைஞர்களும், நடிகர்களும் தான் காரணம்.  படத்தில் 6 பாடல்கள் இருக்கிறது. அது படத்துடன் ஒன்றி போய் இருக்கிறது. அதற்கு சிறப்பான வரிகளும் கிடைத்துள்ளது. இந்த படத்தை பார்த்து உங்களது ஆதரவை தாருங்கள்.” என்றார்.

 

எடிட்டர் பிரகாஷ் கருணாநிதி கூறுகையில், “இந்த கதையில் ஒரு மனிதநேயம் பேசப்பட்டு இருக்கிறது. ஜெயமோகன் சார் போன்ற சிறந்த எழுத்தாளருடைய கதையை சிறப்பாக படமாக்கி இருக்கிறோம். அதற்கு பொருத்தமான நடிகர்கள் இந்த படத்திற்குள் வந்துள்ளனர். ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் என அனைவரும் கதையை மேம்படுத்தி உள்ளனர். நடிகர் கண்ணா ரவிக்கு இந்த படம் திருப்பு முனையாக இருக்கும்.   இந்த படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.” என்றார்.

 

நடிகர் ஹரிஷ் கூறுகையில், “இந்த படக்குழு என்னை அரவணைத்து கொண்டார்கள். இது போன்ற குழுவுடன் பயணித்ததே எனக்கு  மிகுந்த மகிழ்ச்சி. இயக்குனர் ரஃபிக் அவர்கள் கதையை காட்சியாக கடத்தும் விதம் என்னை பிரமிக்க வைத்தது.  இந்த படம்  உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.” என்றார்.

 

நடிகர்  ஆறுபாலா கூறுகையில், “கதையின் சிந்தாந்தத்தை அதன் சாராம்சம் குறையாமல் இயக்குனர் படமாக்கி இருக்கிறார். படபிடிப்பு முழுவதும் மிகுந்த அர்பணிப்போடு இருந்தார்.  கண்ணா ரவி உடைய கடின உழைப்பு  பிரமிக்க வைத்தது.  இந்த படத்தை தொழில்நுட்ப கலைஞர்கள் அற்புதமாக மேம்படுத்தி உள்ளனர். படத்தை பார்த்து உங்கள் ஆதரவை தாருங்கள். நன்றி.” என்றார்.