’திரெளபதி’ படத்தை வைத்து பக்கா பிளான் போட்ட ஆர்.கே.சுரேஷ்!

சமீபத்தில் வெளியான ‘திரெளபதி’ என்ற படத்தின் டிரைலர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. காரணம், அப்படத்தில் ஆணவக் கொலையை ஆதரிக்கும் வகையில் இடம்பெற்றிருந்த வசனம் தான்.
‘பழைய வண்ணாரப்பேட்டை’ என்ற தோல்விப் படத்தை இயக்கிய ஜி.மோகன் என்பவர் இயக்கியிருக்கும் இப்படம் கிரவுட் பண்டிங் முறையில் தயாரிக்கப்பட்டிருக்கிறதாம். இப்படத்தின் டிரைலரில் இடம்பெற்றிருந்த காட்சிகளும், வசனங்களும், வேறு ஒரு சாதியினரை கடுமையாக விமர்சித்திருந்ததோடு, ஆணவக் கொலையை ஆதரிக்கும் வகையிலும் இருந்தது.
இது குறித்து படத்தின் இயக்குநர் மோகன்.ஜி சில ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் நாடகக் காதலை மையமாக வைத்து தான் இப்படத்தை இயக்கியிருக்கிறோம். மற்றபடி இது சாதி சம்மந்தமான படம் இல்லை, என்று விளக்கம் அளித்திருக்கிறார். அதே சமயம், ஆணவக் கொலையை ஆதரிக்கும் ஒரு படத்திற்கு எப்படி தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டது, என்று கேட்டு வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்திருப்பதால், படத்தின் ரிலீஸில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், பிரபல நடிகர், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தரான ஆர்.கே.சுரேஷ் ‘திரெளபதி’ படத்தை தென் மாவட்டங்களில் வெளியிடும் உரிமையை பெற்றிருக்கிறாராம்.
ஜாதி அடக்குமுறையையும், ஆணவக் கொலைகளையும் விமர்சித்தும், எதிர்த்தும் தான் திரைப்படங்கள் வந்திருக்கின்றன. ஆனால், முதல் முறையாக ஜாதி அடக்குமுறைகளை ஆதரிக்கும் வகையிலும், ஆணவக் கொலைகளை வரவேற்கும் வகையிலும் உருவாகியிருக்கும் இந்த ‘திரெளபதி’ படம், மேல் ஜாதியினரின் பெருமைகளை பேசும் படம், என்று விளம்பரப்படுத்தப்பட்டு வருவதால், இப்படத்திற்கு தென் மாவட்டங்களில் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
படம் வெளியாகி எங்கு ஓடுகிறதோ இல்லையோ, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் படம் மிகப்பெரிய லாபத்தை பெற்றுக் கொடுக்கும் என்பதனாலேயே ஆர்.கே.சுரேஷ், இப்படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.