சம்பள விஷயத்தில் கறார் காட்டும் சிம்பு! - புதுப்படம் கைவிடப்படுகிறதா?
சிம்பு சில பல பிரச்சினைகளுக்குப் பிறகு ‘மாநாடு’ படத்தில் நடிக்க தொடங்கிய சில நாட்களிலேயே கொரோனாவால் படப்பிடிப்பு நின்று விட்டது. தற்போது கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் கொரொனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருவதால், திரைப்படப் படப்பிடிப்புகளுக்கு உடனடியாக அனுமதி கொடுப்பது கடினம் தான் என்று கூறப்படுகிறது.
இதனால், சிம்புவின் ‘மாநாடு’ படம் அடுத்த ஆண்டு தான் வெளியாகும் என்றும் பேச்சு அடிபட, இதற்கிடையே நேரத்தை வீணாக்கமல், சிறிய பட்ஜெட் மற்றும் சில குறிப்பிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்தக்கூடிய விதத்தி ஒரு படத்தை இயக்கும் எண்ணத்தில் இயக்குநர் வெங்கட் பிரபு இருக்கிறாராம். இந்த படத்தில் சிம்புவையே ஹீரோவாக நடிக்க வைக்க பேச்சு வார்த்தையும் நடத்தி வருகிறாராம். ஆனால், இதுவரை இது தொடர்பாக சிம்பு எந்த பதிலையும் தெரிவிக்கவில்லையாம்.
இந்த நிலையில், மிஷ்கின் இயக்கத்தில் சிம்பு நடிக்க இருந்த படமும் தற்போது கைவிடப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு காரணம் சிம்பு தான் என்றும் கூறப்படுகிறது. ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கும் இப்படத்திற்கு சம்பளமாக சிம்பு ரூ.10 கோடி கேட்கிறாராம். இயக்குநர் மிஷ்கின் ரூ.8 கோடி சம்பளம் கேட்கிறாராம். மேலும், மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் சம்பளம் மற்றும் படப்பிடிப்பு செலவு என்று மொத்தமாக படத்திற்கு ரூ.36 கோடி பட்ஜெட் வருகிறதாம்.
ஆனால், இது பெரிய பட்ஜெட் என்று கருதிய ஏ.ஜி.எஸ், சம்பளத்தையும், செலவையும் குறைக்க வேண்டும், என்று கூறுகிறதாம். ஆனால், சிம்பு தனது சம்பளத்தில் இருந்து ஒரு பைசா கூட குறைக்க முடியாது என்று கூற, இயக்குநர் மிஷ்கினும் அவர் வழியையே பின் பற்றுகிறாராம்.
எனவே, ஏ.ஜி.எஸ் நிறுவனம், சிம்பு - இயக்குநர் மிஷ்கின் இணையும் படத்தை தயாரிப்பதில் இருந்து பின் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.