கோவாவில் ஹன்சிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் சிம்பு!

சிம்பு தனது பழைய காதலியான ஹன்சிகா நடிக்கும் ‘மஹா’ படத்தில் சிறப்பு தோற்றம் ஒன்றில் நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். தற்போது அப்படத்தில் சிம்பு இடம்பெறும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஹன்சிகாவும், சிம்புவும் படக்குழுவினருடன் கோவாவில் முகாமிட்டுள்ளனர்.
எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் மதியழகன் தயாரிக்கும் இப்படத்தை ஜமீல் இயக்குகிறார்.
இப்படத்திற்காக சிம்பு கொடுக்கும் ஒத்துழைப்பு குறித்து புகழ்ந்து தள்ளும் தயாரிப்பாளர் மதியழகன், “நாங்கள் திட்டமிட்ட 8 நாட்கள் படப்பிடிப்பில் தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக கோவா படப்பிடிப்பில் இருக்கிறோம். ஒவ்வொரு நாளும் 5 வெவ்வேறு இடங்களில் படம் பிடிக்க வேண்டும் என்பதால் மிகவும் பரபரப்பாக இருக்கிறது. இந்த கட்ட படப்பிடிப்பில் STR மற்றும் ஹன்சிகா மோத்வானி ஆகியோர் நடிக்கும் ஒரு பாடல், சண்டைக் காட்சி, காதல் காட்சிகள், பார்ட்டி, காதல் பிரிவு மற்றும் திரும்ப சேர்தல் போன்ற காட்சிகள் படமாக்கப்பட வேண்டியுள்ளது. படப்பிடிப்பு மிகச்சிறப்பாக போய்க்கொண்டிருப்பது எனக்கு மிகவும் திருப்தி அளிப்பதாக இருக்கிறது. குறிப்பாக, STR உடனான தருணங்களே என்னை உற்சாகப்படுத்துகின்றன. அவரை பற்றி வெளியில் சொல்லப்பட்டதில் இருந்து இது முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது. முதல் நாளில் இருந்தே, நான் அவரது ஒவ்வொரு விஷயங்களையும் சந்தோஷமாக அனுபவிக்கிறேன். எங்களால் ஒரு சரியான கேரவன் கூட ஏற்பாடு செய்ய முடியவில்லை, STR ஏதாவது பிரச்சினை செய்வாரா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் அவரோ, "சார், இது ஒன்றும் திரையில் தெரிய போவதில்லை, படப்பிடிப்பில் நாம் கவனம் செலுத்துவோம்” என்றார். நாங்கள் மதியம் 12 மணியில் இருந்து இரவு 12:30 மணி வரை 12 மணி நேரம் தொடர்ச்சியாக படம் பிடித்தோம். ஆனாலும் அவர் அடுத்த நாள் எத்தனை மணிக்கு வர வேண்டும் என கேட்டு விட்டு தான் செல்வார். அத்தகைய ஒரு நடிகரை பெறுவது எங்களை போன்ற ஒரு வளரும் தயாரிப்பாளருக்கு ஒரு பெரிய வரம்.
ஹன்சிகா மோத்வானி முற்றிலும் ஒத்துழைப்பு கொடுத்து நடிக்கிறார். அவர்களின் கெமிஸ்ட்ரி மிகச்சிறப்பாக இருக்கிறது. இயக்குநர் ஜமீல் மிகத் திறமையாக சிறப்பாக செயல்படுகிறார். எந்த ஒரு அழுத்தத்தையும் சவால்களையும் மிகவும் எளிதாக கையாள்கிறார், ஒளிப்பதிவாளர் லக்ஷ்மணும் அவரை போலவே. இளைஞர்களை உள்ளடக்கிய ஒட்டுமொத்த குழுவும் எனர்ஜியை முழுமையாக பரப்பி வருகின்றது.” என்றார்.