Nov 01, 2021 06:30 PM

பழங்குடி இருளர் சமூக மக்களின் நலனுக்காக ரூ.1 கோடி நன்கொடை வழங்கிய சூர்யா - ஜோதிகா தம்பதி

பழங்குடி இருளர் சமூக மக்களின் நலனுக்காக ரூ.1 கோடி நன்கொடை வழங்கிய சூர்யா - ஜோதிகா தம்பதி

பழங்குடி இருளர் சமூக மக்களின் மறைக்கப்பட்ட வலிகளை உலகிற்கு உரக்க சொல்லும் முயற்சியாக சூர்யா நடித்து, தயாரித்திருக்கும் படம் ‘ஜெய் பீம்’. நவம்பர் 2 ஆம் தேதி வெளியாக உள்ள இப்படம் பத்திரிகையாளர்களுக்காக நேற்று திரையிடப்பட்டது. படத்தை பார்த்த ஒட்டு மொத்த பத்திரிகையாளர்களும், படத்தையும், அதில் வழக்கறிஞர் வேடத்தில் நடித்த சூர்யாவையும் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.

 

இப்படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பு இதுவரை எந்த ஒரு ஒடிடி படத்திற்கும் கிடைக்காத வரவேற்பு என்பதால், ஒட்டு மொத்த திரையுலகம் மட்டும் இன்றி, சினிமா ரசிகர்களும் இப்படத்தை கொண்டாடி வரும் நிலையில், படத்தை தயாரித்த சூர்யா - ஜோதிகா தம்பதி, பழங்குடி இருளர் இன மக்களின் நலனுக்காக தங்களது 2டி நிறுவனம் சார்பில் ரூ.1 கோடி நிதி உதவி செய்துள்ளனர்.

 

இதற்கான காசோலையை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் முன்னிலையில் பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் நலனுக்காக சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து வழங்கினார். இந்த நிகழ்வில் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன், நீதியரசர் சந்துரு, இயக்குநர் த.செ.ஞானவேல் மற்றும் பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.