Jan 22, 2026 04:29 PM

‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ படப்பிடிப்பு நிறைவடைந்தது!

‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ படப்பிடிப்பு நிறைவடைந்தது!

தயாள் பத்மநாபன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தை 2M சினிமாஸ் நிறுவனத்தின் சார்பாக கே.வி.சபரீஷ் தயாரித்துள்ளார். டி பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பாக இயக்குநர் தயாள் பத்மநாபனும் இணை தயாரிப்பாளராக இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் வெற்றி, ரங்கராஜ் பாண்டே, பிரகிடா, லிஸ்சி ஆண்டனி, சரவணன், 'லொள்ளு சபா' மாறன், இளவரசு, கவிதா பாரதி மற்றும் சுப. வீரபாண்டியன் உட்பட பலர் நடித்துள்ளனர். இதில் பெரியாரிய சிந்தனையாளரான சுப. வீரபாண்டியன், கதைக்கு வலுவான சித்தாந்த ஆழத்தை சேர்க்கும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

 

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படமாக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துள்ளது.  படப்பிடிப்பு முடிவடைந்ததை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியதோடு, தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்கள். 

 

படம் குறித்து இயக்குநர் தயாள் பத்மநாபன் கூறுகையில், “‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ தீர்மானமான நம்பிக்கையிலிருந்து பிறந்த திரைப்படம். முழு படக்குழுவும் இந்தக் கதையின் மீது நேர்மையுடனும் நம்பிக்கையுடனும் பணியாற்றியது, படப்பிடிப்பு நிறைவடைந்தது மிகுந்த திருப்தியை அளிக்கிறது.மேலும் இந்தப் படம் பார்வையாளர்களை ஆழமாக பாதித்து, சிந்திக்க வைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.” என்றார்.

 

Lakshmikanthan Kolai Vazhakku

 

தயாரிப்பாளர் கே.வி. சபரீஷ் கூறுகையில், “இந்தப் படம் முதல் நாளிலிருந்தே அர்ப்பணிப்பு, உறுதி மற்றும் தெளிவான நோக்கத்தை எதிர்பார்த்தது. இந்தக் கதையின் உண்மைத்தன்மையைப் புரிந்து கொண்டு முழு அர்ப்பணிப்போடு  பணிபுரிந்து  நேர்மையுடன் அதை நிறைவேற்றிய படக்குழுவை நினைத்து பெருமைப்படுகிறேன். போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகளில் மும்முரமாக உள்ளோம். பார்வையாளர்களுக்கு அர்த்தமுள்ள ஒரு திரைப்பட அனுபவத்தை வழங்க ஆவலுடன் காத்திருக்கிறோம்.” என்றார்.

 

தயாள் பத்மநாபன் கதை எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தின்  திரைக்கதை மற்றும் வசனத்தை கவிதா பாரதி மற்றும் தயாள் பத்மநாபன் எழுதியுள்ளனர். எம்.வி.பன்னீர் செல்வம் ஒளிப்பதிவு செய்ய, தர்புகா சிவா இசையமைக்கிறார். அன்பு கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.