என்னை கட்டாயப்படுத்தி சம்மதிக்க வைத்தார்கள்! - ஐஸ்வர்யா ராஜேஷ் பரபரப்பு புகார்

சுமார் 10 வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வேண்டும் என்று போராடி வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், சில படங்களில் சிறிய வேடங்களில் நடித்ததோடு, தனது வயதுக்கு மிஞ்சிய வேடங்களிலும் நடித்து வந்தார்.
எந்த வேடமாக இருந்தாலும் தன்னை ஒரு திறமையான நடிகையாக வெளிக்காட்ட வேண்டும் என்ற ஆர்வத்தில் இளம் வயதிலேயே அம்மா வேடங்களில் நடித்த அவருக்கு அப்படங்கள் மூலம் நல்ல பெயர் கிடைத்தது. இதற்கிடையே, ‘கனா’ படம் அவரை தமிழ் சினிமாவின் முக்கிய நடிகைகளில் ஒருவராக்கியுள்ளது.
இந்த நிலையில், ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘சாமி 2’ படத்தில் தான் விருப்பம் இல்லாமல் நடித்ததாகவும், தன்னை கட்டாயப்படுத்தி அந்த வேடத்தில் நடிக்க சம்மதிக்க வைத்ததாகவும் ஐஸ்வர்யா பரபரப்பு புகார் கூறியுள்ளார்.
இது குறித்து பேட்டி ஒன்றில் கூறிய ஐஸ்வர்யா ராஜேஷ், “நான் இந்த படத்தில் (சாமி 2) நடிக்க விரும்பவில்லை. ஆனால் விக்ரம்-ஹரி என்னை பர்சனலாக கேட்டுக்கொண்டதால் ஒப்புக்கொண்டேன். வேறு எந்த நடிகையும் ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள் என அவர்கள் கூறியதாலும், நான் நடிக்க சம்மதம் தெரிவித்தேன்.” என்றார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த வேடத்தில் முதலில் திரிஷாவை தான் ஒப்பந்தம் செய்தார்கள். ஆனால், படத்தில் சில காட்சிகளே அந்த கதாபாத்திரம் வருவதால், அவர் அதை தவிர்த்துவிட்டார். பிறகு தான் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்தார். அவரது நடிப்பு குறித்து மோசமான விமர்சனங்கள் வந்ததால், ஐஸ்வர்யா ராஜேஷ் ரொம்பவே அப்செட்டாகி விட்டார்.