சூப்பர் ஸ்டார் படத்தை நிராகரித்த திரிஷா!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வரும் திரிஷா, சுமார் 15 வருடங்களாக முன்னணி ஹீரோயினாக நடித்து வருகிறார். இவர் நடிக்கும் படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருவதால் திரிஷாவுக்கு தமிழ் மற்றும் தெலுங்கு படங்களின் வாய்ப்புகள் அதிகரித்து வருவதோடு, மலையாளப் படங்களின் வாய்ப்புகளும் குவிகின்றது.
ரஜினியுடன் ‘பேட்ட’ படத்தில் நடித்த திரிஷா, தற்போது தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வந்தார். கொரட்டலா சிவா இயக்கும் இப்படத்திற்கு ‘ஆச்சார்யா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சிரஞ்சீவியின் 152 வது படமாக இப்படம் உருவாகி வருகிறது.
இந்த நிலையில், ‘ஆச்சார்யா’ படத்தில் இருந்து திரிஷா விலகிவிட்டார். இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் திரிஷா, சில சமயங்களில் சொல்வதை செய்ய தவறிவிடுகிறார்கள். அதனால் தான் ஆச்சார்யா படத்தில் இருந்து விலக வேண்டிய சூழல் ஏற்பட்டது, என்று தெரிவித்துள்ளார்.
மேலும், படக்குழுவினருக்கு வாழ்த்துகள் தெரிவித்த திரிஷா, தனது தெலுங்கு ரசிகர்களை வேறு ஒரு படம் மூலம் விரைவில் சந்திப்பேன், என்றும் தெரிவித்துள்ளார்.
‘ஆச்சார்யா’ படக்குழுவினருக்கும் திரிஷாவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே அவர் படத்தில் இருந்து விலகிவிட்டாராம்.