May 07, 2019 11:01 AM

தமிழ் சினிமாவில் நுழைந்த டிடிவி தினகரன்!

தமிழ் சினிமாவில் நுழைந்த டிடிவி தினகரன்!

அரசியல் தலைவர்கள் பலர் தங்களை விளம்பரப் படுத்திக் கொள்வதற்காக எதாவது ஒரு வழியில் சினிமாவுக்குள் நுழைகிறார்கள். இதில் சிலர் நேரடியாக நுழைந்தாலும், பலர் மறைமுகமாக சினிமாவுக்குள் நுழைந்து வருகிறார்கள்.

 

அந்த வகையில், தமிழக அரசியலின் லேட்டஸ் பரபரப்பான அமுமுக கட்சியின் தலைவர் டி.டி.வி.தினகரன் சினிமாவில் நுழைந்திருக்கிறார். தினகரனின் சினிமா எண்ட்ரி நேரடியாக அல்லாமல், வேறு ஒரு தயாரிப்பாளருக்கு உதவி செய்த வகையில் அமைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

அதாவது, ஜீவா நடிப்பில் அறிமுக இயக்குநர் காளீஸ் இயக்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட படம் ‘கீ’ இணையத்தின் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பாதிப்புகளை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் ரிலீஸுக்கு தயாராகி சில வருடங்கள் ஆனாலும், சில பிரச்சினைகளால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.

 

இப்படத்தை தயாரித்த மைக்கேல் ராயப்பன், சிம்புவை வைத்து தயாரித்த ’அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படம் பெரிய நஷ்ட்டத்தை சந்தித்ததால், அதனால் கீ படமும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து பிரச்சினைகளை தீர்த்து படத்தை வெளியிட பல முறை முயற்சித்தும், ஒவ்வொரு முறையும் ரிலீஸ் தேதி அறிவித்து, பிறகு படம் வெளியாகாமல் போனது.

 

Producer Michael Rayappan

 

இப்படியே தொடர்ந்த சிக்கல் தற்போது தீர்ந்து இம்மாதம் 10 ஆம் தேதி ‘கீ’ படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்தது. அப்படி இருந்தும் படம் வெளியாவதில் சிக்கல் எழுந்ததாகவும், பிறகு தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் டிடிவி தினகரனை சந்தித்து பிரச்சினை குறித்து பேசினாராம்.

 

நடந்தவை அனைத்தும் கேட்ட டிடிவி தினகரன், கீ படத்தின் பிரச்சினைகள் அனைத்தும் தீர்த்து வைத்து படம் ரிலீஸாக உதவி புரிந்துள்ளார். அதன்படி, சுக்ரா ஸ்டூடியோஸ் என்ற நிறுவனம் கீ படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளது.

 

Kee

 

இதன் மூலம், பல முறை ரிலீஸ் தள்ளிப் போன ’கீ’ படம் மே 10 ஆம் தேதி நிச்சயம் வெளியாகும் என்று கூறப்படுவதோடு, டிடிவி தினகரன் கோடம்பாக்கத்திற்குள் மறைமுகமாக நுழைந்துவிட்டார் என்றும் பேச்சு அடிபடுகிறது.