Jun 10, 2021 10:21 AM

உயிர்காக்கும் பணியில் இறங்கிய சின்னத்திரை பிரபலங்கள் அமித் பார்கவ், ஸ்ரீஜனனி

உயிர்காக்கும் பணியில் இறங்கிய சின்னத்திரை பிரபலங்கள் அமித் பார்கவ், ஸ்ரீஜனனி

கொரோனா இரண்டாம் அலை தமிழகத்தில் ஏராளமான உயிர்களை பலிவாங்கிய நிலையில், அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கை மூலம் கொரோனா பரவலை கட்டுப்படுத்தி வருகிறது. அதேபோல், சமூக ஆர்வலர்களும், தனியார் அமைப்புகளும் கொரோனா பிடியில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு பல்வேறு வகையில் உதவி வருகிறார்கள்.

 

இந்த நிலையில், சின்னத்திரை பிரபலங்களான நடிகர் அமித் பார்கவ் மற்றும் ஸ்ரீஜனனி, மக்களின் உயிர்காக்கும் பணியில் இறங்கியுள்ளனர். அதன்படி, கொரொனா சிகிச்சைக்கு அதிமுக்கியமாகத் தேவைப்படும் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வாங்கிக் கொடுக்கும் பணியை இவர்கள் முன்னெடுத்திருக்கிறார்கள். இதற்காக அவர்கள் தஞ்சை மற்றும் புதுக்கோட்டை பகுதியை தேர்வு செய்துள்ளனர்.

 

தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மக்களின் உயிர்காக்க ஆக்சிஜன் செறிவூட்டிகள் தேவைப்படுகின்றன. மாவட்டத்திலுள்ள மருத்துவமனைகள் பலவற்றில் ஆக்சிஜன் தட்டுப்பாடும், மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடும், ஆம்புலன்ஸ் தேவையும் உள்ளது. இத்தேவைகளை பூர்த்தி செய்யும் நடவடிக்கையில் அமித் பார்கவ் மற்றும் ஸ்ரீஜனனி ஈடுபடுள்ளனர்.

 

இதற்காக கிரவுட் ஃபண்டிங் தளத்தின் வாயிலாக அமித் பார்கவ் மற்றும் ஸ்ரீஜனனி, நிதி திரட்டி வருகின்றனர். அமித் பார்கவ் தொலைககட்சி தொடர்களில் நடித்து வருவதோடு, ஜீ தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வருகிறார். ஸ்ரீஜனனி பாடகியாகவும் நிகழ்ச்சி தொகுப்பாளினியாகவும் இருக்கிறார். கூடவே சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

 

இதனை, ஆக்சிஜன் செறிவூட்டிகள் வாங்கவும், ஆம்புலன்ஸ் சேவைகளை அதிகரிக்கவும் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளனர்.இந்த நற்செயலில், தஞ்சையைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் நிமல் ராகவனும் பங்கேற்கிறார்.நிமல் ராகவனைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால், இவர் கடந்த 2018ம் ஆண்டு முதல் தஞ்சை உள்ளிட்ட டெல்டா பகுதி மக்களுக்காக பல்வேறு நற்பணிகளை செயல்படுத்தி வருகிறார்.

 

நிமலும் அவரின் குழுவினரும் இணைந்து கொரோனா முதல் அலையின்போது தொடர்ச்சியாக 15 நாட்களுக்கு 4000 குடும்பங்களுக்கு உணவளித்த பசியாற்றினர்.

 

அமித், ஸ்ரீஜனனி முன்னெடுத்துள்ள இந்த திட்டத்தில், கைகோர்த்துள்ள நிமல் திரட்டப்படும் நிதி மூலம் வாங்கப்படும் ஆக்சிஜன் செறிவூட்டிகளை மருத்துவமனைகளுக்குக் கொண்டு சேர்ப்பதில் உதவியாக இருப்பார். இதற்காக மாவட்ட நிர்வாகத்திடம் பேசியிருக்கிறார்.

 

Amit Bhargav

 

இதுவரை அமித், ஸ்ரீஜனனி மற்றும் நிர்மல் திரட்டியுள்ள பணத்தின் மூலம் 5 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வாங்கப்பட்டுள்ளன. அவை பேராவூரணி, பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி, ஆலங்குடி உள்ளிட்ட பகுதி மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

 

தஞ்சை பகுதியின் தேவையைத் தீர்க்க இன்னும் 16 ஆக்சிஜன் செறிவூட்டிகள் தேவைப்படுகின்றன. மக்களின் உயிர்காக்கும் இந்தப் பணியில் நல் உள்ளம் கொண்டோர் இணைய வேண்டுகோள் விடுக்கின்றனர்.