இப்படி ஒரு வேடத்தில் வடிவேலு! - ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா?
வைகை புயல் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் வடிவேலு தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்கள் வரலாற்றில் தனக்கென்று தனி இடம் பிடித்திருப்பவர். திரைப்படங்கள் மட்டும் இன்றி, மீம்ஸ் உலகிலும் வடிவேலு தான் ராஜா. அவர் இல்லாமல் ஒரு மீம்ஸ்கள் கூட வெளியாகாது என்ற நிலை தான் இருக்கிறது.
காமெடியனாக மட்டும் இன்றி ஹீரோவாகவும் வெற்றி பெற்ற வடிவேலு சில பிரச்சினைகளால் சுமார் 2 வருடங்கள் நடிக்காமல் இருந்த நிலையில், தற்போது கமல்ஹாசனின் ‘தலைவன் இருக்கின்றான்’ படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அப்படத்தை தொடர்ந்து மேலும் சில படங்களில் நடிப்பதற்கான பேச்சு வார்த்தையும் நடக்கிறதாம்.
இதற்கிடையே, வெப்சீரிஸிலும் வடிவேலு விரைவில் களம் இறங்க போகிறார். அவரை வைத்து காமெடி வெப் சீரிஸ் ஒன்றை தயாரிக்க முன்னணி ஒடிடி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கியிருக்கும் நிலையில், அது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், வடிவேலு குறித்த புதிய தகவல் ஒன்று கோலிவுட்டில் கசிந்திருக்கிறது. அதாவது, காமெடி வேடத்தில் நடித்த வடிவேலு ஹீரோவாகவும் வெற்றி பெற்ற நிலையில், தற்போது முன்னணி நடிகரின் படத்தில் வில்லன் அவதாரம் எடுக்க இருக்கிறாராம்.
தற்போது ‘மாநாடு’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் சிம்பு, அப்படத்திற்கு பிறகு மிஷ்கின் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் வடிவேலுவை வில்லனாக நடிக்க வைக்க இயக்குநர் மிஷ்கின் முடிவு செய்திருக்கிறாராம்.
ஏற்கனவே, இயக்குநரும் நடிகருமான பாண்டியராஜன், ஹீரோக்களாக நடித்த பிரசன்னா, நரேன், செல்வா போன்றவர்களை வில்லன்களாக நடிக்க வைத்த மிஷ்கின், வடிவேலுவையும் வில்லனாக நடிக்க வைத்தால், அதை ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா? என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.