Apr 11, 2018 06:49 AM

விஜய் அரசியலுக்கு வந்தால் காமெடியாகிவிடும் - சொன்னது யார் தெரியுமா?

விஜய் அரசியலுக்கு வந்தால் காமெடியாகிவிடும் - சொன்னது யார் தெரியுமா?

ரஜினி, கமல், விஷால் என்று நடிகர்கள் பலர் அரசியலில் இறங்கியுள்ள நிலையில், இவர்களுக்கு முன்பாகவே அரசியல் மீது ஆர்வம் காட்டியவர் நடிகர் விஜய். தற்போதும் தான் நடிக்கும் படங்களில் அனல் பறக்கும் அரசியல் வசனங்களை பேசி தனது அரசியல் ஆர்வத்தை விஜய் வெளிப்படுத்தி வருகிறார்.

 

ரஜினி, கமல் போன்றவர்கள் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அரசியல் பேசிய நிலையில், ஜெயலலிதா முதல்வராக இருந்த போதே, தனது ரசிகர்களை வைத்து மாஸ் காட்டிய விஜய், அதற்காக பல பிரச்சினைகளையும் சந்தித்தார். விஜயின் இத்தகைய அரசியல் ஆர்வத்திற்கு அவரது அப்பாவும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் முக்கிய காரணம் என்று சொல்லலாம். 

 

இந்த நிலையில், விஜய்க்கு அரசியல் ஆசையை உண்டுபண்ணிய எஸ்.ஏ.சந்திரசேகரே, தற்போது விஜய் அரசியலுக்கு வந்தால் காமெடியாகிவிடும், என்று கூறியிருக்கிறார்.

 

இது குறித்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், “இப்போது தான் சீனியர்களான ரஜினி, கமல் அரசியலுக்கு வந்துள்ளனர். இப்போது விஜய் அரசியலுக்கு வந்தால் ஜோக் ஆகிவிடும். அவர் அரசியலில் குதிக்க வேண்டும் என நான் நினைத்தேன், ஆனால் அதற்கு இது சரியான நேரமல்ல. விஜய் எந்த ஒரு முடிவையும் தெளிவாக யோசித்து எடுக்க கூடியவர். அவர் என்ன முடிவெடுப்பார் என்பது எனக்கு தெரியாது.” என்று தெரிவித்துள்ளார்.

 

 

தற்போது விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் பல நலத்திட்ட உதவிகளை செய்து வருவதோடு, ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி சில இடங்களில் போராட்டங்களும் நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.