ரஜினி பட இயக்குநருடன் கைகோர்த்த விக்ரம்!
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்து வரும் விக்ரம், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ‘கோப்ரா’-விலும் நடித்து வருகிறார். ‘கோப்ரா’ படத்தின் 65 சதவீதம் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இறுதிக் கட்டப் படப்பிடிப்புக்கு படக்குழு தயாராகி வருகிறது.
இதற்கிடையே, கொரோனா பிரச்சினையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு, கொரோனா பிரச்சினை முடிவுக்கு வந்து படப்பிடிப்புகள் தொடங்கினாலும் தொடங்காது என்று கூறப்படுகிறது. இதனால், அப்படத்தில் நடித்த பல நடிகர்கள் தற்போது வேறு படங்களில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அந்த வகையில், நடிகர் விக்ரமும் தனது புதிய படத்தில் கவனம் செலுத்த தொடங்கியிருப்பதாகவும், இதற்காக பல இளம் இயக்குநர்களிடம் கதை கேட்டு வருவதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில், விக்ரமின் அடுத்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க இருப்பதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ரஜினியை வைத்து ‘பேட்ட’ படம் மூலம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த கார்த்திக் சுப்புராஜ், டாப் இயக்குநர்களின் பட்டியலில் இடம் பிடித்ததோடு, தனுஷை வைத்து ‘ஜகமே தந்திரம்’ என்ற படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் இயக்கியிருக்கிறார்.
இதனால், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க பல நடிகர்கள் விருப்பம் தெரிவித்த நிலையில், அவர் விக்ரமை வைத்து படம் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.