Aug 08, 2022 08:20 PM

அப்பா என்பது வெறும் வார்த்தை அல்ல, நம்பிக்கை என்று சொல்லும் படம் தான் ‘விருமன்’ - நடிகர் கார்த்தி

அப்பா என்பது வெறும் வார்த்தை அல்ல, நம்பிக்கை என்று சொல்லும் படம் தான் ‘விருமன்’ - நடிகர் கார்த்தி

கார்த்தி, அதிதி ஷங்கர் நடிப்பில், முத்தையா இயக்கத்தில் 2டி சார்பில் சூர்யா தயாரித்திருக்கும் ‘விருமன்’ வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

 

யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்ற நிலையில், இன்று சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் கார்த்தி, அதிதி ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துக்கொண்டார்கள்.

 

படம் குறித்து நடிகர் கார்த்தி பேசுகையில், “இப்படத்தின் டிரைலர் வரும்வரை பதட்டமாகத்தான் இருந்தது. அயல்நாட்டு மொழிப் படங்களைப் பார்த்து கலாச்சாரம் மாறி விட்டதா? நமது மண் சார்ந்த படங்களுக்கு ஆதரவு இருக்காதோ? ஏனென்றால், கிராமத்தில் கூட ஸ்விக்கி, ஸொமேட்டோ வந்துவிட்டது. ஆனால், டிரைலர் வெளியாகி வெற்றிப் பெற்றதும் அந்த எண்ணம் மாறிவிட்டது.

 

பருத்தி வீரன் பாணி கொம்பனில் வரக் கூடாது என்று கவனமாக இருப்பேன். கடைக்குட்டி சிங்கத்தில் 5 அக்காவிற்கு தம்பியாக இருக்க வேண்டும். முன் படத்தின் சாயல் வரக் கூடாது என்று எண்ணுவேன்.

 

ஷோபி மாஸ்டர் எனக்கு என்ன வருமோ அதை உணர்ந்து கொடுப்பார். கிராம வாழ்க்கை தான் அழகாக இருக்கிறது. அந்த கதாபாத்திரம் ஏற்று நடிக்கும்போது சுகமாக இருக்கிறது.

 

என் மாமனாருக்கு என்னுடம் பேச மிகவும் பிடிக்கும் ஆனால், எனது தோளை தொட்டுவிட்டு சென்று விடுவார். நானே வலிய சென்று பேசி அவரிடம் பேசுவேன். உலக அரசியல் வரைக்கும் அனைத்தையும் அறிந்து வைத்திருப்பார். எப்படி என்று கேட்டால், எல்லாம் டீ கடையில் தான் என்பார்.

 

ராஜ்கிரண் சார் நடிக்கிறார்  என்று கூறியதும் நம்பிக்கை வந்துவிட்டது. காசு வாங்காமல் நடிப்பேன் ஆனால், சம்பளம் வாங்காமல் நடிக்க மாட்டேன், என்பார் பிரகாஷ் ராஜ் சார். கலைஞன் என்றால் பணத்தைப் பொருட்படுத்தாமல் நடிக்க வேண்டும் என்ற அழகான விஷயத்தை பிரகாஷ் ராஜ் கற்றுக் கொடுத்தார்.

 

விடியற்காலை 3 மணிக்கு பாடல் காட்சிகளை பதிவு செய்தார்கள். அந்த நேரத்தில் சினேகன் வரிகள் பாடலுக்கு அழகு சேர்த்துள்ளது. சூரி அண்ணன் நடிகர் என்றே தோன்றாது. குட்டி இயக்குனர் போலவே இருப்பார். சிறு இடம் கிடைத்தாலும் பஞ்ச் வசனங்களை இயல்பாக பேசிவிடுவார். உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஏதாவது பிரச்னை என்றால் உடனே ஓடிப் போய்விடுவார்.

 

கடைக்குட்டி சிங்கத்தில் அவருக்கும் எனக்குமான ஒரு காட்சியில் மழை பெய்து கொண்டிருந்த போதும் அழுதுவிட்டார். அவரால் காமெடியும் நடிக்க முடியும், குணசித்திர வேடமும் நடிக்க முடியும்.

 

ஏற்கனவே, இருக்கும் கிராமம் போன்ற காட்சிகள் இல்லாமல் புதிதாகவும், வித்தியாசமாகவும் இருக்க வேண்டும் என்று ஜாக்கியிடம் கேட்டுக் கொண்டோம். செல்வாவிடம் எனக்கு க்ளோசப் வேண்டாம், அழகான கிராமங்கள் இருக்கும்போது 'வைட்' கோணத்தில் வைத்தே எடுங்கள் என்று கூறினேன். அந்த கிராமத்தில் வாழ்வோர் எப்போதுதான் அதன் அழகைக் கண்டு ரசிப்பார்கள் என்று கூறினேன்.

 

என் முதல் படம் வெற்றி என்ற வார்த்தையை என்னிடம் முதலில் கூறியது சக்தி தான். நகரத்தில் இருப்பவர்களின் கேளிக்கை வேறு, கிராமப்புறங்களில் இருப்பவர்களின் கேளிக்கை வேறு என்று உற்சாகமாக கூறுவார். அவர் என்னுடைய குடும்பத்தில் ஒருவர் மாதிரி. மிகவும் உண்மையான மனிதர்.

 

2டி நிறுவனம் இப்படத்தை பிரமாண்டமாக கொண்டு சேர்க்க வேண்டும் என்று தான் மதுரையில் வைத்தார்கள். ஆனால், அங்கிருந்த ரசிர்களின் விசில் சத்தம் இன்னும் கேட்டுக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து 5 மணி நேரம் உற்சாகமாக இருந்தார்கள்.

 

உறவுகளின் மேன்மை, கிராமங்களில் இருக்கும் அன்பு ஆகியவற்றை மட்டும் இந்த படம் சொல்லவில்லை. அப்பா என்பது வெறும் வார்த்தை அல்ல, நம்பிக்கை என்று கூறும் படம் தான் இது. 

 

எங்களுக்கு எதாவது ஒன்று என்றால் பிருந்தா பக்கத்திலேயே இருப்பார். என் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாதபோது, அவருடைய தம்பி உடன் இருந்தார். அதன் காரணமாகத்தான் கந்தன் வேண்டும் என்று முடிவெடுத்தோம். அண்ணயையும், பிருந்தாவையும் கொடுத்த அப்பா அம்மாவிற்கு நன்றி.

 

படப்பிடிப்பில் இருக்கும்போது ஒரு அம்மா ஓடிவந்து இங்கிருக்கும் பள்ளியை வந்து பாருங்கள் என்று கூறினார். அங்கு சென்று பார்த்தால் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. இப்போது அகரம் சார்பாகவும், பலரும் செய்த உதவியால் இன்று சிறப்பாக இருக்கிறது. இதுபோன்று இருக்கும் இடங்களில் கேட்டபிறகு உதவி செய்யாமல் தாமே முன்வந்து செய்ய வேண்டும்.

 

இப்படம் பெரிய வெற்றிபெற வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.” என்றார்.