Aug 18, 2021 01:54 PM

விஷாலுக்கு கிடைத்த நியாயம்! - தயாரிப்பு நிறுவனத்திற்கு அபராதம்

விஷாலுக்கு கிடைத்த நியாயம்! - தயாரிப்பு நிறுவனத்திற்கு அபராதம்

விஷால் நடிப்பில் கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி வெளியான படம் ‘சக்ரா’. இப்படம் வெளியீட்டின் போது டிரைடெண்ட் ஆர்ட்ஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன் நிறுவனங்கள் படத்தின் வெளியீட்டுக்கு தடை விதிக்க கோரி வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் படம் வெளியீட்டுக்கு தடை விதிக்கவில்லை.

 

ஆனால், சக்ரா படத்தின் இரண்டு வார வசூல் விவரங்கள் மற்றும் இணையத்தில் வெளியிடும் ஒப்பந்தம் ஆகியனவற்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பிறகு இந்த வழக்கு குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

 

இந்த நிலையில், லைகா நிறுவனத்தால் விஷால் மற்றும் சக்ரா படத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும், பொய்யான வழக்கை முன்வைத்து விஷாலை துன்புறுத்தியதற்காக லைகா நிறுவனத்திற்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

 

இந்த தகவலை நடிகர் விஷால், தனது சமூக வலைதளப் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளார். ஆனால், இது குறித்து லைகா நிறுவனம் எந்த ஒரு விளக்கமும் இதுவரை அளிக்கவில்லை.