Mar 11, 2020 04:47 AM

பீதியை கிளப்பும் குழந்தை கடத்தல் பின்னணி! - உண்மையை சொல்ல வரும் ‘வால்டர்’

பீதியை கிளப்பும் குழந்தை கடத்தல் பின்னணி! - உண்மையை சொல்ல வரும் ‘வால்டர்’

மருத்துவமனையில் இருந்து பச்சிளம் குழந்தை கடத்தப்பட்டது. பெண் ஒருவர் குழந்தையை கடத்தி சென்ற காட்சி சிசிடி வீடியோவில் பதிவாகியுள்ளது, ரயில் நிலையத்தில் குழந்தை கடத்தல், என்று பல செய்திகளை நாம் பத்திரிகைகளில் படித்திருப்போம். படித்த சில நிமிடங்களில், அந்த செய்தியை கடந்து அடுத்த செய்திக்கு சென்று விடுவோம். ஆனால், குழந்தை கடத்தல் பின்னணி குறித்து அறிந்தால் நிச்சயம் நமக்கு தூக்கம் வராது. அந்த அளவுக்கு அதன் பின்னணியும், நெட்வொர்க்கும் அதி பயங்கரமாக இருக்கிறது, என்ற உண்மையை உலகிற்கு சொல்ல வருகிறது ‘வால்டர்’ திரைப்படம்.

 

சிறுவர்கள் கடத்தல் தொடர்பாக தமிழ் சினிமாவில் சில படங்கள் வெளியாகியிருந்தாலும், பச்சிளம் குழந்தைகள் கடத்தலை மையமாக வைத்து இதுவரை எந்த படமும் வெளியாகவில்லை, என்பது ஒரு புறம் இருந்தாலும், குழந்தை கடத்தல் சம்பவம், என்பது தடுக்க முடியாது பெரிய குற்றமாக இருக்கிறது. இது தொடர்பாக சில சமூக ஆர்வலர்கள் குரல் கொடுத்து வந்தாலும், கடத்தப்படும் குழந்தைகள் கண்டுபிடிக்கப்படுகிறதா? அப்படி கண்டுபிடிக்கப்பட்டாலும், அந்த குழந்தைகளின் நிலை என்ன ஆகிறது? போன்ற கேள்விகளுக்கு விடை என்பதே இல்லை என்ற நிலையில், அதற்கான விடையையும், அதன் பயங்கரத்தையும் விரிவாக பேசியிருக்கிறது ‘வால்டர்.

 

அறிமுக இயக்குநர் யு.அன்பு இயக்கத்தில் சிபிராஜ் ஹீரோவாக நடித்திருக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி, நட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். ஷ்ரின் கான்ஞ்வாலா ஹீரோயினாக நடிக்க, ரித்விகா, யாமினி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.

 

11:11 புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ஸ்ருதி திலக் தயாரிக்கும் இப்படத்திற்கு டாக்டர்.பிரபு திலக் இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். பொழுதுபோக்கு படங்களாக மட்டும் இன்றி, சமூகத்திற்கு நல்ல விஷயங்களை சொல்லும் படங்களாக தயாரிக்கும் டாக்டர்.பிரபு திலக், ‘அடுத்த சாட்டை’ படத்திற்குப் பிறகு இந்த படத்தை தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் சொல்லப்பட்டிருக்கும் விஷயம் சமூகத்திற்கு மிகவும் முக்கியமானதாக கருதப்படுவதோடு, இதுவரை குழந்தை கடத்தல் பற்றி எந்த ஒரு திரைப்படமும் சொல்லாத பல உண்மை சம்பவங்களையும், அதன் பின்னணியையும் இந்த படத்தில் சொல்லப்பட்டிருப்பதால் இப்படத்திற்கு பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

 

வரும் மார்ச் 13 ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றிருக்கும் நிலையில், தற்போது படத்தின் ஸ்னீக் பீக் என்று சொல்லக்கூடிய சில நிமிட காட்சிகளும் வைரலாகி வருகிறது.