Dec 28, 2019 10:43 AM

’தர்பார்’ படத்திற்கு பிறகு எந்த ஹீரோவை இயக்குகிறீர்கள்? - ஏ.ஆர்.முருகதாஸ் பதில்

’தர்பார்’ படத்திற்கு பிறகு எந்த ஹீரோவை இயக்குகிறீர்கள்? - ஏ.ஆர்.முருகதாஸ் பதில்

முதல் முறையாக ரஜினியை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருக்கும் ‘தர்பார்’ வரும் ஜனவரி 9 ஆம் தேதி வெளியாக உள்ளது. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தில் நயன்தாரா, ஹீரோயினாக நடித்திருக்கிறார். பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி வில்லனாக நடித்திருக்கிறார்.

 

தற்போது சென்சார் பணியில் ஈடுபட்டிருக்கும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து ‘தர்பார்’ படம் குறித்து பகிர்ந்துக் கொண்டவர், ”‘தர்பார்’ ரசிகர்களை குஷிப்படுத்தும் சூப்பர் ஸ்டார் முத்திரை படமாக இருப்பதோடு, என் படங்களில் என்னவெல்லாம் இருக்குமோ, அதை ரஜினி சார் பாணியிலும் சொல்லியிறுக்கிறேன்.” என்றவரிடம், ”தர்பார் படத்தின் டிரைலர் தமிழை விட இந்தியில் பெரிய அளவில் ரீச் ஆகியிருக்கிறதே, ஏன்” என்றதற்கு, “அது முதலிலேயே நாங்கள் திட்டமிட்டது தான். சுமார் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த படத்தை தயாரிக்கப்பட்டிருக்கிறது. அப்படியானால் தமிழ் மார்க்கெட்டை மட்டும் இன்றி இந்தி மற்றும் தெலுங்கு மார்க்கெட்டையும் குறி வைத்து தான் டிரைலரை தயார் செய்தோம். அதன்படி, இந்தி ரசிகர்களுக்கு டிரைலர் எப்படி இருந்தால் பிடிக்கும் என்பதை மனதில் வைத்து தான் டிரைலரை தயார் செய்தோம். அதனால், தான் இந்தியில் டிரைலர் பெரிய அளவில் ரீச் ஆகியிருக்கிறது.

 

மேலும், தமிழில் ரஜினிகாந்த் படம் வெளியாவதை சொல்லி தெரிய வேண்டியதில்லை. ஆனால், பாலிவுட்டில் தர்பார் வெளியாகும் போது, இரண்டு பெரிய ஹீரோக்களின் படங்கள் வெளியாகிறது. அவர்களது படங்களை தாண்டி ரஜினி சார் படம் வெளியாவதை தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்தி ரசிகர்களுக்கு பிடித்தவாறு டிரைலரை ரெடி செய்தோம்.” என்றார்.

 

’தர்பார்’ படத்திற்குப் பிறகு விஜயுன் இணையப் போவதாகவும், அடுத்த ரஜினிக்கே மீண்டும் ஒரு படம் இயக்கப் போவதாகவும், அஜித்தை வைத்து இயக்கப் போவதாகவும் தகவல் பரவுகிறது, உண்மையில் அடுத்தப் படம் எந்த ஹீரோவுடன்? என்று கேட்டதற்கு, “நான் ஒரு ஹீரோ, ஒரு தயாரிப்பாளர் என்று இருக்க மாட்டேன். அடுத்தப் படம் என்றால், ஐந்து தயாரிப்பாளர்கள் என்னை தொடர்பு கொள்வார்கள், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடக்கும், அதில் யார் எனக்கு செட்டாவார்கள், என்று யோசிப்பேன். அதுபோல முன்று, நான்கு ஹீரோக்களுடன் பேச்சுவார்த்தை போகும், அதில் ஒருவருடன் தான் இணைவேன். ஆனால், அவை அனைத்தும் உடனே நடந்து விடாது. சில மாதங்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு தான் எனக்கே தெரிய வரும். அதேபோல், எப்போது வேண்டுமானாலும், எது வேண்டுமானாலும் மாறும். அதனால், இப்போதைக்கு எனது அடுத்தப் படம் குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை.” என்றார்.