May 14, 2021 03:00 PM

இளையராஜா மற்றும் ரஹ்மான் வாரிசுகள் இணைந்து உருவாக்கிய நபிகள் பாடல்!

இளையராஜா மற்றும் ரஹ்மான் வாரிசுகள் இணைந்து உருவாக்கிய நபிகள் பாடல்!

இசையமைப்பாளர் இளையராஜாவின் வாரிசான இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜவும், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் வாரிசான ஏ.ஆர்.அமீனும் இணைந்து முகம்மது நபிகளின் பெருமை பேசும் தனித்துவ பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளார்கள்.

 

“தலா அல் பத்ரு அலைனா...” (TALA AL BADRU ALAYNA...) என்று தொடங்கும் இப்பாடல் மதீனா நகரின் மக்கள், முகம்மது நபிகளை (Pbuh), போற்றி, தங்கள் மதீனா நகருக்கு வரவேற்று பாடிய வரலாற்று கவிதை பாடலை அடிப்படையாக கொண்டது.  

மக்களின் வேண்டுகோளை ஏற்று, மதீனா நகருக்கு முகம்மது நபிகள், (Pbuh) வருகை புரிந்த போது, மதீனா மக்களால் வரவேற்று பாடப்பட்ட பாடல் இது. பெரும் வரலாற்றை உள்ளடக்கிய, மதீனா நகரில் உருவான இப்பாடல் உலகம் முழுக்கவே மிகவும் புகழ் பெற்றது.

 

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீனுடன் இணைந்து பாடியுள்ள இப்பாடல் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இன்று (மே 14) வெளியாகியுள்ளது.

 

இப்பாடல் குறித்து யுவன் சங்கர் ராஜா கூறுகையில், “இத்தருணத்தில் நான் மிக மகிழ்ச்சியாக உணர்கிறேன். “தலா அல் பத்ரு அலைனா...” போன்ற தெய்வீக பாடலை இசையமைப்பது எனக்கு கிடைத்த மிகப்பெரும் பெருமை. மேலும் எனது சகோதரர் ஏ.ஆர்.அமீன் அவர்களுடன் இது போன்ற ஆன்மீக பாடலை இணைந்து பாடியது மிகப்பெரும் மகிழ்ச்சி. நம்மை சுற்றி எதிர்மறை எண்ணங்கள் சூழ்ந்திருக்க, இப்பாடல் நம் ஆன்மாவில், மலர்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கும்.” என்றார்.

 

ஏ.ஆர்.அமீன் கூறுகையில், “நபிகளை (Pbuh) போற்றும் தெய்வீகமான பாடலை அன்பு சகோதரர் யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து பாடியது மனதிற்கு மிகப்பெரும் மகிழ்வை தந்துள்ளது. இந்த இனிய ஈகைத் திருநாள் அனைவரது வீட்டிலும், அன்பையும், நிம்மதி  அருளட்டும்.” என்றார்.

 

யுவன் சங்கர் ராஜா இசையமைத்து, அமீனுடன் இணைந்து பாடியுள்ள இப்பாடல் மூலம் வரும் அனைத்து வருமானமும், தேவையுள்ள ஏழை, எளியோர்ருக்கு அளிக்கப்பட உள்ளது.