Sep 30, 2025 03:53 AM

ஜீ5 தமிழின் ‘வேடுவன்’ இணையத் தொடர் அக்டோபர் 10 ஆம் தேதி ஒளிபரப்பாகிறது

ஜீ5 தமிழின் ‘வேடுவன்’ இணையத் தொடர் அக்டோபர் 10 ஆம் தேதி ஒளிபரப்பாகிறது

ஜீ5 தமிழின் புதிய தமிழ் இணையத் தொடரான ‘வேடுவன்’ டிரைலர் வெளியாகியுள்ள நிலையில், வரும் அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது டிரைலர் வெளியாகி எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இருன்மை நிறைந்த, உணர்ச்சிப்பூர்வமான  மற்றும் திகில் நிறைந்த கதையம்சத்தில் பரபர திரில்லராக இந்த தொடர் உருவாகியுள்ளது. 

 

வேடுவன் சீரிஸில் முன்னணி கதாபாத்திரத்தில் கண்ணா ரவி நடித்துள்ளார். மேலும் சஞ்சீவ் வெங்கட், ஸ்ரவ்நிதா ஸ்ரீகாந்த், ரம்யா ராமகிருஷ்ணா, ரேகா நாயர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். பவன் இயக்கியுள்ள இந்த தொடரை ரைஸ் ஈஸ்ட் நிறுவனத்தின் ஸ்ரீநிதி சாகர் தயாரித்துள்ளார். விபின் பாஸ்கர் இசையமைத்துள்ளார்.

 

கதையில் சூரஜ் (கண்ணா ரவி), முன்னேற போராடும் நடிகராக வாழ்ந்து வரும் போது, ’என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் அருண்’ என்ற போலீஸ் அதிகாரியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது. தனது கரியரை மீண்டும் உயிர்ப்பிக்க வந்த இந்த வாய்ப்பு, சூரஜை அருணின் ரகசியங்கள், சவாலான பணி, கடினமான முடிவுகள் ஆகியவற்றின் உலகில் ஆழமாக இழுத்துச் செல்கிறது. சினிமா கதையும் நிஜ வாழ்க்கையும் கலக்கும் நிலையில், கடமை, காதல், நெறிமுறைகள் மூன்றும் மோதும் பரபரப்பான  திரில்லராக இந்த கதை நகர்கிறது.

 

நடிகர் கண்ணா ரவி கூறுகையில், “வேடுவன் எனக்கு மிக நெருக்கமான படைப்பு. இது ரீல்-ரியல் கலந்த ஒரு வித்தியாசமான  வாழ்க்கைப் பயணம். சூரஜாக நடித்தது மிக மகிழ்ச்சியான அனுபவம், ஒரு நடிகனின் போராட்ட வாழ்க்கையை மட்டும் அல்லாமல், அருணின் சவால்கள், முடிவுகள், தியாகங்களை வாழ்ந்தது போன்ற உணர்வைத் தந்தது. கடமைக்கும், காதலுக்கும்,  மக்கள் எவ்வளவு தூரம் செல்வார்கள் என்பதை சொல்லும் கதை இது. ஒரு நடிகனாக, இது எனக்கு வித்தியாசமான சவாலை அளித்தது.” என்றார்.

 

ZEE5 தமிழ் & மலையாளம் பிஸினஸ் ஹெட்அான லாய்ட் சி.சேவியர் கூறுகையில், “வேடுவன் மூலம், வேர்களோடு பிணைந்த, துணிச்சலான, உணர்ச்சிப்பூர்வமான கதைகளை எங்கள் தமிழ் பார்வையாளர்களுக்குக் கொண்டு செல்வதில் மகிழ்ச்சியடைகிறோம்.  வலுவான நடிகர்கள், உணர்ச்சி மிக்க கதை, அருமையான விஷுவல் மூன்றும் இணைந்திருப்பதால், இது சாதாரண டிராமாவாக இல்லாமல், ரசிகர்களுக்கு  பிரத்தியேகமான அனுபவத்தை தரும். மனித உணர்வுகளின் உறுதியைப் பற்றிய சக்திவாய்ந்த கதையாக, பார்வையாளர்களுக்கு இனிமையான அனுபவம் தரும்  என்று நம்புகிறோம்.” என்றார்.

 

இயக்குநர் பவன் கூறுகையில், “வேடுவன் எனது கண்ணோட்டத்தில், காதல், கடமை, துரோகம் ஆகியவை மனித உணர்வுகளின் ஆழத்தைக் கேள்விக்குள்ளாக்கும் கதையாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். ஒவ்வொரு கதாபாத்திரமும் ஆழமாக  வடிவமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் எடுக்கும் முடிவுகளுக்கு பெரிய விலை கொடுக்கிறார்கள்.  பொழுதுபோக்கைத் தாண்டி சிந்திக்க வைக்கும், பார்வையாளர்கள் தங்களும் இத்தகைய சூழலில் என்ன செய்வார்கள் என்று கேள்வி எழுப்பும் கதையாக இருக்க வேண்டும்  என்பதே எனது நோக்கம். இப்படியான கதைக்கு துணிச்சலாக ஆதரவளித்த ZEE5-க்கு நன்றி. பார்வையாளர்கள் ‘வேடுவன்’ உலகத்தை அனுபவிப்பதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.” என்றார்.