Jun 26, 2025 03:22 AM

’திருக்குறள்’ திரைப்பட விமர்சனம்

21e6af690d2f41a991fbd77d509f8363.jpg

Casting : Kalai Chozhan, Danalakshmi, Guna Babu, Padini Kumar, Chandru, Suganya, OAK Sundar, Subramaniya Siva, Kottachi, Aravind Aandavar, Aruvi Anandan, Indhumathi, Karthi, Yasar, Aritha Sri

Directed By : AJ Balakrishnan

Music By : Ilayaraja

Produced By : Ramana Communications

 

வள்ளுவநாட்டில் வாழும் திருவள்ளுவர் இளைஞர்களுக்கு தமிழ் கற்றுக்கொடுப்பதோடு, ஒன்னே முக்கால் அடிகளை கொண்ட செய்யுள்களை எழுதி, அதை புத்தமாக தொகுக்கும் முயற்சியிலும் ஈடுபடுகிறார். அவரது முயற்சிக்கு உறுதுணையாக இருக்கிறார் அவரது காதல் மனைவி வாசுகி. அவர் எழுதிய சில செய்யுள்களை மதுரைத் தமிழ்ச் சங்கத்திற்கு எடுத்துச் சென்று அங்கீகாரம் பெற முயற்சிக்கிறார். ஆனால், சங்கத்தின் விதிகளுக்கு உட்பட்டதாக அவரது செய்யுள்கள் இல்லாததால் அதை மதுரை தமிழ்ச் சங்கம் நிராகரித்து விடுகிறது. 

 

இருப்பினும், தனது பணியை திருவள்ளுவர் தொடர்வதோடு, தனது படைப்பு தமிழ்ச் சங்கத்திற்கானது இல்லை, உலக மக்களுக்கு நன்மை பயக்கும் ஒரு படைப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையில் ஆயிரங்களுக்கு மேலான செய்யுள்களை எழுதிக் கொண்டிருக்கிறார். இதற்கிடையே, சிறு ராஜ்ஜியங்களில் நடக்கும் சூழ்ச்சிகளால் நல்லாட்சி புரியும் மன்னர்கள் வீழ்த்தப்பட்டு, மக்களுக்கு இன்னல்களை கொடுப்பவர்கள் அரசர்களாக பதவி ஏற்பதால் மக்கள் அவதிப்படுகிறார்கள். இதனால், மக்களுக்கு எதிரான கொடுங்கோல் ஆட்சியை ஒழிக்க வேண்டும், என்று சிலர் விரும்புவதோடு, இது பற்றி திருவள்ளுவரிடமும் பேசுகிறார்கள். போரையும், உயிர் பலிகளையும் விரும்பாத திருவள்ளுவர் மக்களின் நலனுக்காக போர் மூலம் கொடுங்கோல் மன்னனை வீழ்த்தி மக்களுக்கு நல்லாட்சி தருபவர்களை அரியணையில் அமர வைப்பதற்கான பணிகளிலும் ஈடுபடுகிறார்.

 

ஒரு பக்கம் தனது புத்தகப் பணி மறுபக்கம் மக்களுக்கு நல்லாட்சி அமைவதற்கான யுத்த பணி என்று பயணிக்கத் தொடங்கும் திருவள்ளுவர் தனது புத்தகமான திருக்குறளை அரங்கேற்றினாரா?, போர் அவர் நினைத்து போல் மக்களுக்கு சாதகமாக அமைந்ததா? என்பதை மனதுக்கு நெருக்கமாகவும், அழகியலோடும் சொல்வதே ‘திருக்குறள்’.

 

’வீரபாண்டியன் கட்டபொம்மன்’ படத்திற்குப் பிறகு எப்படி சிவாஜி கட்டபொம்மனாக மக்கள் மனதில் நின்றாரோ, அதுபோல் திருவள்ளுவர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கலைச்சோழன் மற்றும் வாசுகி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தனலட்சுமி, இனி மக்கள் மனதில் திருவள்ளுவர் மற்றும் வாசுகியாக மக்கள் மனதில் இடம் பிடிப்பது உறுதி. 

 

ஆசிரியருக்கான அனுபவம் மற்றும் நிதானம், பிறருக்கு அறிவுரை கூறும்போது தெளிவு, மக்களுக்காக வருந்தும் போது பரிவு, போர்க்களத்தில் வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும் கம்பீரம், தனது படைப்புக்கு எதிராக சொல்லப்படும் கருத்துக்கு மறுப்பு தெரிவித்து வாதிடும் தைரியம் என அத்தனை உணர்வுகளையும் மிக நேர்த்தியாக வெளிப்படுத்தி புகைப்படத்தில் மட்டுமே பார்த்து வந்த திருவள்ளுவரின் கற்பனை உருவத்தை நம் கண்முன் நடமாட வைத்திருக்கிறார் நடிகர் கலைச்சோழன்.

 

வள்ளுவரின் வாசுகியாக நடித்திருக்கும் தனலட்சுமி, பெயருக்கு ஏற்ற முகம், முகத்திற்கு ஏற்ற நடிப்பு என்று கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாகவும், சிறப்பான நடிப்பையும் வெளிப்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார்.

 

பரிதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் குணாபாபு மற்றும் பவளக்கொடி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பாடினி குமார் காதல் ஜோடியாக மட்டும் இன்றி, வீரத்திற்கும், மானத்திற்கும் பெருமை சேர்க்கும் ஜோடியாகவும் வலம் வருகிறார்கள். இருவரது நடிப்பும் அளவு, சிறப்பு.

 

மாட்டத்தி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சுகன்யா மற்றும் சங்கு மாறன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சந்துரு ஜோடி ககப்பு திருமணங்கள் சங்கக்காலங்களிலேயே இருந்தது என்றும், அதனை ஆதரிப்பது தான் நம் கலாச்சாரமும், இலக்கியமும் என்பதை அழகியலோடு உணர்த்தியிருக்கிறார்கள்.

 

பாண்டிய மன்னனாக நடித்திருக்கும் ஓ.ஏ.கே.சுந்தர், நக்கீரராக நடித்திருக்கும் சுப்பிரமணிய சிவா, புலவர் பெருந்தலைச்சாத்தனாராக நடித்திருக்கும் கொட்டாச்சி, குமணனாக நடித்திருக்கும் அரவிந்த் ஆண்டவர், நன்னனாக நடித்திருக்கும் கார்த்தி, பரிதியின் தோழனாக நடித்திருக்கும் யாசர், போர்க்கருவிகளை தயாரிக்கும் குழுவின் ஒருங்கிணைப்பாளராக நடித்திருக்கும் நாற்காலி கார்த்தி என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்களும் கதபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாகவும், திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்க்கும் வகையிலும் நடித்திருக்கிறார்கள்.

 

இளையராஜாவின் இசை மற்றும் பாடல் வரிகள் சங்ககாலத்திற்கு ஏற்ப இருப்பதோடு, திரும்ப திரும்ப கேட்க வைத்து ரசிக்க வைக்கிறது. பின்னணி இசை கதைக்களம் மற்றும் காட்சிகளின் அழகியலுக்கு கூடுதல் அழகு சேர்த்திருக்கிறது.

 

ஒளிப்பதிவாளர் எட்வின் சகாய், பொருளாதாரத்திற்கு ஏற்ப பணியாற்றியிருந்தாலும், நீரோடை மற்றும் எங்கும் நிறைந்திருக்கும் பச்சை நிறங்கள் என்று கண்களுக்கும், மனதுக்கும் தனது கேமரா மூலம் இதம் அளித்திருக்கிறது. 

 

கலை இயக்குநர் சுரேஷ் கலேரி மற்றும் ஆடை வடிமைப்பாளர் சுரேஷ் குமார் ஆகியோரது பணியும் கதைக்களத்துடனும், கதை மாந்தர்களுடனும் நம்மை பயணிக்க வைக்கிறது.

 

செம்பூர்.கே.ஜெயராஜின் கதை, திரைக்கதை, வசனம் திருவள்ளுவரின் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும், என்ற கற்பனைக்கு உயிரூட்டியிருக்கிறது. திருக்குறள் எத்தகைய சூழல்களில் எழுதப்பட்டது, அதற்கான தனிச்சிறப்பு என அனைத்தையும் திரைக்கதை மற்றும் காட்சிகளோடு ஒன்றிணைத்து பயணிக்க வைத்து பார்வையாளர்களை படத்துடன் ஒன்றிவிட செய்திருக்கிறார் செம்பூர்.கே.ஜெயராஜ்.

 

இயக்குநர் ஏ.ஜெ.பாலகிருஷ்ணன் சங்கால கதையை திரைப்படமாக்கும் சொல்லப்படும் மக்களுக்கு ஆதரவான மற்றும் எதிரான மன்னராட்சியை பின்னணி கதையாக கொண்டு அதன் மூலம் காதல், யுத்தம், கொடை, சூழ்ச்சி உள்ளிட்ட பல விசயங்களை திருக்குறளோடு தொடர்புபடுத்தி காட்சிகளை வடிவமைத்து சுவாரஸ்யமான திரைப்படமாக கொடுத்திருக்கிறார்.

 

திருவள்ளுவர் வெறும் புலவர் மட்டும் அல்ல, மக்கள் எப்படி வாழ வேண்டும், மன்னன் எப்படி ஆட்சி செய்ய வேண்டும் என்பதை வகுத்த மாமேதை என்பதையும், அவர் படைத்த திருக்குறள் மட்டுமே கல் அருந்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஒரே இலக்கியம் மற்றும் படைப்பு என்பதை அழுத்தமாக பதிவு செய்ததோடு, அனைத்து இலங்கிய படைப்புகளுக்கும் தலையாய படைப்பு திருக்குறளே என்பதை அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விதத்தில், ஒரு சிறந்த திரைப்படமாக கொடுத்திருக்கிறார்.

 

மொத்தத்தில், ‘திருக்குறள்’ தமிழுக்கு பெருமை சேர்க்கும் திருக்குறளுக்கு பெருமை சேர்க்கும் சிறந்த படைப்பு.

 

ரேட்டிங் 5/5