Mar 15, 2018 11:36 AM

முத்தலாக் மசோதாவுக்கு முஸ்லிம் பெண்கள் எதிர்ப்பு - சென்னையில் நடைபெறும் பிரம்மாண்ட பேரணி!

d5b84858bacb4938b913a3827c868185.jpg

மத்திய அரசின் முத்தலாக் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முஸ்லிம் பெண்களின் கூட்டமைப்பு சார்பாக, சென்னையில் வரும் மார்ச் 17 ஆம் தேதி மாபெரும் எதிர்ப்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

 

மத்திய அரசின் முத்தலாக் மசோதாவுக்கு நாடு முழுவதும் முஸ்லிம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், முஸ்லிம் பெண்களும் மத்திய அரசின் இத்தகைய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன பேரணியும், பொதுக் கூட்டங்களையும் நடத்தி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு முஸ்லிம் பெண்களின் கூட்டமைப்பு சார்பாக அமைதியான முறையில் இந்த எதிர்ப்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் ஏராளமான முஸ்லிம் பெண்கள் கலந்துக்கொள்ள உள்ளனர்.

 

இது குறித்த அறிவிப்பை இன்று வெளியிட்ட தமிழ்நாடு முஸ்லிம் பெண்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஏ.எஸ்.பார்த்திமா முசப்பர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைப் பாதுகாப்பு) மசோதா - 2017” கடந்த 28-12-2017 அன்று பாராளுமன்றத்தில் லோக் சபாவில் மத்திய பா.ஜ.க அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்டு, ராஜ்ய சபாவில் நிறைவேற்றபடாமல் நிலுவையில் உள்ளது என்பதை தாங்கள் அறிவீர்கள். முத்தலாக்கிற்குத் தடை விதிப்பதோடு மட்டுமல்லாமல், தலாக் கொடுக்கும் கணவனுக்கு மூன்று ஆண்டுச் சிறைத் தண்டனை, தொடர்பு இல்லாத யாரும் புகார் கொடுக்கலாம், ஜாமீனில் வெளி வர முடியாது, என்று மசோதாவில் ஷரீயத்திற்கு புறம்பான தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

 

பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் முற்றிலும் அநீதி இழைப்பதோடு, முஸ்லிம்களின் ஷரீயத்தில் தலையிடுவதாகவும், இந்திய அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள தனி நபர் சட்ட உரிமைகளை பறிப்பதாகவும் இந்த முத்தலாக் மசோதாவான “முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமை பாதுகாப்பு) மசோதா” அமைக்கப்பட்டுள்ளது.

 

ஷரீயத்திற்கு முற்றிலும் புறம்பாக உள்ள இந்த மசோதாவை முஸ்லிம் பெண்கள் வரவேற்பதாகவும், முஸ்லிம் பெண்களுக்கு சமௌரிமை வழங்கியடஹ்ற்கு மத்திய அரசாங்கத்திற்கு நன்றி கூறுவதாகவும் பொய்ப் பிரச்சாரத்தை மத்திய பா.ஜ.க அரசாங்கம் தொடர்ந்து செய்து வருகிறது. இந்த பொய்ப் பிரச்சாசரத்தை எதிர்த்து ஜனநாயக ரீதியாக குரலெழுப்பவும், இந்திய அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளைப் பாதுகாக்கவும், அகில இந்திய அளவில் மாநிலந்தோறும் முஸ்லிம் பெண்களின் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு கட்டமாக ‘தமிழ்நாடு முஸ்லிம் பெண்களின் கூட்டமைப்பு’ சார்பாக, மாபெரும் அமைதியான எதிர்ப்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

‘முத்தலாக் மசோதாவை வாபஸ் வாங்கு’ என்ற கோரிக்கையை முவைத்து நடத்தப்படும் இந்த பேரணி மற்றும் பொதுக்கூட்டம் வரும் சனிக்கிழமை மார்ச் 17ஆம் தேதி, பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.

 

அண்ணா சாலை மக்கா மஸ்ஜித் பின்புறம் உள்ள லேங்ஸ் கார்டன் சாலையில் தொடங்கும் பேரணி, லேங்ஸ் கார்டன் சாலை சிந்தாதரிப்பேட்டை சந்திப்பில் முடிவடையும். அதை தொடர்ந்து அதே பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெறும்.” என்று தெரிவித்தார்.