Oct 28, 2021 07:27 PM

’பாதுகாப்பான தீபாவளி’ - வேலம்மாள் பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

24d906b78adaac9edaaa98156886f608.jpg

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது குறித்து தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சார்பில் சென்னை முகப்பேரில் உள்ள வேலம்மாள் பள்ளியில் ‘பாதுகாப்பான தீபாவளி’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

 

தமிழ்நாடு தீயணைப்புத்துறை இணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட இந்த நிகழ்ச்சியில், சென்னை மாவட்ட தீயணைப்பு அதிகாரி சரவணன், கூடுதல் அதிகாரிகள் கார்த்திகேயன், சூர்யபிரகாஷ், வேலம்மாள் பள்ளி முதன்மை முதல்வர் கே.எஸ்.பொன்மதி, கல்வி இயக்குனர் ஜெயந்தி ராஜகோபாலன் ஆகியோரும் கலந்துக் கொண்டார்கள்.

 

இந்த நிகழ்ச்சியில் பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது எப்படி? என்று பிரியா ரவிச்சந்திரன் தலைமையிலான தீயணைப்பு அதிகாரிகள் மற்றும் வீரர்கள் வெடித்து காண்பித்ததோடு, தீ விபத்தில் சிக்கிய நபருக்கு முதலுதவி அளித்து மீட்பது, எண்ணெய் தீ விபத்து, குடிசையில் பற்றிய தீ விபத்து என பல்வேறு தீ விபத்துகளின் போது எவ்வாறு துரிதமாக செயல்பட்டு தீயை அணைக்க வேண்டும், என்பதை தீயணைப்பு வீரர்கள் செய்து காண்பித்தனர்.

 

Fire

 

மேலும், பேரிடர் நேரத்தில் இடிபாடுகளில் சிக்கியவர்களை எப்படி மீட்பது? என்பது குறித்து விளக்கிய தீயணைப்பு வீரர்கள், அந்த சமயத்தில் பயன்படுத்தப்படும், டோர் ஓபனர், ஹைட்ராலிக் கட்டர், ஹைட்ராலிக் ஸ்பிரடர், ஹைட்ராலிக் ஜெனரேட்டர் உள்ளிட்ட பல்வேறு நவீன ரக எந்திரங்களை மாணவர்களிடம் காண்பித்து, அவற்றின் பயன்பாடுகள் மற்றும் பயன்படுத்தும் முறையை விளக்கினார்கள்.

 

நிகழ்ச்சியில் பேசிய பிரியா ரவிச்சந்திரன், தீ விபத்தில்லா தீபாவளியே மகிழ்ச்சியான தீபாவளி. எனவே அரசு வரையறுக்கவுள்ள நேரத்தில் பட்டாசுகளை பாதுகாப்பாக வெடித்து தீபாவளியை ஆனந்தமாக கொண்டாடுங்கள். இந்த ஆண்டு தீ விபத்தில்லா தீபாவளி எனும் நிலை ஏற்பட அனைவரும் தீயணைப்பு துறைக்கு ஒத்துழைப்பு தரவேண்டும், என்று கேட்டுக் கொண்டார்.

 

கடந்த ஆண்டு தீபாவளி தினத்தன்று தமிழகம் முழுவதும் 80 தீ விபத்துகள் பதிவாகியுள்ளது. இதில் சென்னையில் 30 விபத்துகள் பதிவானது. 29 சிறுவர்கள் பாதிக்கப்பட்டதும் இதில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.