Feb 23, 2026 06:03 PM

பாரி இளவழகன் - ரம்யா ரங்கநாதன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது

பாரி இளவழகன் - ரம்யா ரங்கநாதன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் (Million Dollar Studios) மற்றும் நியோ கேஸ்டில் கிரியேஷன்ஸ் ( Neo Castle Creations) இணைந்து தயாரித்துள்ள புதிய திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் இனிதே நிறைவு பெற்றிருக்கிறது.

 

தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைக்களங்களை தொடர்ந்து வழங்கி வரும் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், ‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ உள்ளிட்ட தொடர் வெற்றிப்படங்களுக்குப் பிறகு தனது 7-வது தயாரிப்பாக இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறது.

 

நியோ கேஸ்டில் கிரியேஷன்ஸ்-இன் சத்யா கரிகாலன், மில்லியன் டாலர் ஸ்டுடியோஸின்  யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில், ‘ஜமா’ வெற்றியின் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாரி இளவழகன் கதை மற்றும் திரைக்கதை எழுதி இயக்கி கதாநாயகனாக நடித்திருக்கிறார். தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்த ரம்யா ரங்கநாதன் இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

 

படத்தின் மிக முக்கிய சிறப்பம்சமாக, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை ரோஜா நீண்ட இடைவெளிக்குப் பிறகு முழுநீள பாத்திரத்தில் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார். இவருடன் சேத்தன், வைரல் யூடியூபர் பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

 

‘மண்டேலா’, ‘மாவீரன்’ புகழ் இசையமைப்பாளர் பரத் சங்கர் இசையமைத்திருக்க, ‘அருவி’, ‘சக்தி திருமகன்’ பட ஒளிப்பதிவாளர் ஷெல்லி கேலிஸ்ட் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படத்தொகுப்பை பார்த்தா மேற்கொண்டிருக்க, கலை இயக்கத்தை மகேந்திரன் கையாண்டிருக்கிறார். பாடல்களை மோகன்ராஜன், முத்தமிழ், பாக்கியம் சங்கர் ஆகியோர் எழுதியிருக்கின்றனர். மக்கள் தொடர்பை யுவராஜ் கவனித்திருக்கிறார்.

 

சென்னையின் பெரம்பூர் பகுதியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படைப்பு, அனைத்து வயதினரும் குடும்பத்துடன் ரசிக்கும் வகையிலான ஜாலியான பேமிலி என்டர்டெயினராக உருவாகியிருக்கிறது.

 

படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வெற்றிகரமாக நிறைவு பெற்றிருக்கும் நிலையில், இப்படம் வரும் சம்மர் 2026-ல் உலகம் முழுவதும் ரசிகர்களை சந்திக்க உள்ளது. வெளியீட்டு தேதியும் படத்தின் தலைப்பு விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.