ரூ.1 கோடியை ஏப்பம் விட்ட மிஷ்கின்! - உதயநிதி படம் ரிலிஸாவதில் சிக்கல்
இயக்குநர் மிஷ்கின் ஒருவரிடம் இருந்து ரூ.1 கோடியை அட்வான்ஸாக வாங்கி ஏப்பம் விட்டதற்காக, உதயநிதியின் ‘சைக்கோ’ படம் சிக்கலில் சிக்கியுள்ளது.
ஏவிஎம் நிறுவனத்தின் குடும்ப வாரிசான மைத்ரேயா என்பவரை ஹீரோவாக்குகிறேன், என்று கூறிய இயக்குநர் மிஷ்கின் அவரது அப்பா ரகுநந்தனை தயாரிப்பாளராக்கி ரூ.1 கோடி அட்வான்ஸாக பெற்றிருக்கிறார். ஆனால், அவர் சொன்னது போல் மைத்ரேயாவை வைத்து படம் எடுக்கவில்லை. வாங்கிய அட்வான்ஸையும் திருப்பிக் கொடுக்கவில்லையாம். இது குறித்து மைத்ரேயா தரப்பில் இருந்து மிஷ்கினை தொடர்புக் கொண்டால், “நீங்கள் தொடர்புகொள்ளும் நபர் வேறு ஒருவருடன் தொடர்பில் இருக்கிறார்” என்று ரிப்ளே வந்திருக்கிறது. அந்த ஃபோன் வாய்ஸ் போலவே, மைத்ரேயாவுக்கு சொன்ன கதையை, அப்படியே உதயநிதியிடம் சொல்லி, ‘சைகோ’ படத்தை மிஷ்கின் தொடங்கியிருக்கிறார்.
இதனால், கோபமடைந்த மைத்ரேயா தரப்பு, நீதிமன்றத்தை நாட, நீதிமன்றம் ‘சைக்கோ’ படத்திற்கு தடை போட்டது. இதனால், ‘சைக்கோ’ படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட. உதயநிதி கோபமடைந்துவிட்டாராம். உடனே, ரகுநந்தனிடம் சமரசத்தில் ஈடுபட்ட மிஷ்கின், அக்டோபர் மாதம் ரூ.50 லட்சம், நவம்பர், டிசம்பர் மாதங்களில் தலா ரூ.25 லட்சம் தருவதாக கூறியிருக்கிறார். இதனையடுத்து சைக்கோ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியிருக்கிறது. ஆனால், மிஷ்கின் சொன்னது போல் அக்டோபர் மாதம் 50 லட்சம் ரூபாய் கொடுக்கவில்லையாம். மீண்டும் பிரச்சினையில் தலையிட்ட நீதிமன்றம் மீண்டும் ‘சைக்கோ’ படப்பிடிப்புக்கு தடை போட்டிருக்கிறது.
இதனை தொடர்ந்து, ரகுநந்தனுக்கு இயக்குநர் மிஷ்கின் ரூ.50 லட்சம் செக் கொடுக்க, மீண்டும் ‘சைக்கோ’ படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது.
ஆனால், நவம்பர், டிசம்பர் மாதம் தருவதாக சொன்ன தொகையை மிஷ்கின் தராமல் டிமிக்கு கொடுக்க, ரகுநந்தன் மீண்டும் நீதிமன்றத்திற்கு செல்ல, அப்போது ‘சைக்கோ’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ் தரப்பில் இருந்து, இயக்குநர் மிஷ்கின் செய்த தவறுக்காக எங்களது படத்தின் படப்பிடிப்பை அடிக்கடி நிறுத்துவதால், எங்களுக்கு தானே இழப்பு, என்று தங்களது வாதத்தை முன் வைத்திருக்கிறார்கள். அப்படி என்றால், மிஷ்கினுக்கு கொடுப்பட வேண்டிய சம்பள பாக்கி இருந்தால் அதை நீதிமன்றத்தில் கட்டுங்கள், என்று நீதிமன்றம் கிடுக்கிப்பிடி போட்டுள்ளது.
நீதிமன்றத்தின் உத்தரவால் கடுப்பான டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ் ‘சைக்கோ’ படத்தை முடித்து ரிலிஸ் செய்யும் பணியை பார்ப்பதா அல்லது மிஷ்கினின் பிரச்சினையை பார்ப்பதா, என்று குழப்பத்தில் இருக்க, மறுபக்கம் ஹீரோ உதயநிதியும் மிஷ்கின் மீது கடும் கோபத்தில் இருக்கிறாராம்.
இம்மாதம் ‘சைக்கோ’ படத்தை ரிலீஸ் செய்வதற்கான பணியில் டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் ஈடுபட்டிருந்தாலும், இயக்குநர் மிஷ்கினால் படம் ரிலிஸில் பெரும் சிக்கல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பேச்சு அடிபடுவதால், படத்தின் வியாபரமும் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.