நடிகர் சூர்யாவின் 47 வது படம் பூஜையுடன் தொடங்கியது
ழகரம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில், நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஜித்து மாதவன் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படமான ‘சூர்யா 47’ படப்பிடிப்பு நேற்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இது நடிகர் சூர்யா மற்றும் பிரபல இயக்குநர் ஜித்து மாதவன் இணையும் முதல் திரைப்படம் ஆகும்.
இந்தக் கூட்டணி குறித்த தகவல்கள் வெளியானது முதலே, ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் இப்படம் குறித்த எதிர்பார்ப்பு பெருமளவில் இருந்து வந்தது. நேற்று நடைபெற்ற பூஜை நிகழ்வில் படத்தின் நாயகி நஸ்ரியா நசீம், மலையாளத் திரையுலகின் இளம் நட்சத்திரம் நஸ்லென், நடிகர் ஆனந்த்ராஜ், இசையமைப்பாளர் சுஷின் ஷியாம் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் ழகரம் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ஜோதிகா மற்றும் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் கார்த்தி, ராஜசேகர் பாண்டியன் (2D என்டர்டெயின்மென்ட்), எஸ்.ஆர். பிரகாஷ் மற்றும் எஸ்.ஆர். பிரபு (ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்) உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.
பூஜை முடிந்த கையோடு, படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பும் சென்னையில் தொடங்கியது.

இப்படம் குறித்து இயக்குநர் ஜித்து மாதவன் கூறுகையில், “புதிய திரைத்துறை, புதிய ஆரம்பம், அதுவும் சூர்யா சார் போன்ற ஒரு பெரும் நட்சத்திரத்துடன் இணைவது எனக்கு கூடுதல் உற்சாகத்தைத் தருகிறது. புதிதாக ஒன்றை முயற்சிக்கிறோம். நாங்கள் கொடுக்கவிருக்கும் இந்தப் புதுமையை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டு ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்.” என்றார்.
படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்க, நஸ்ரியா நசீம் கதாநாயகியாக நடிக்கிறார். சமீபத்திய வெற்றிகள் மூலம் கவன ஈர்த்த இளம் நடிகர் நஸ்லென் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் ஜான் விஜய், ஆனந்த் ராஜ் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர்.
சுஷின் ஷியாம் இசையமைக்கும் இப்படத்திற்கு வினீத் உன்னி பாலோட் ஒளிப்பதிவு செய்கிறார். அஜ்மல் சாபு படத்தொகுப்பு செய்ய, அஸ்வினி காலே கலை இயக்குநராக பணியாற்றுகிறார். சேத்தன் டி.செளசா சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார்.
படப்பிடிப்பு விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ள நிலையில், படத்தின் தயாரிப்பு குறித்த அடுத்தகட்ட அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.

