ஜனநாயக படுகொலை! - அரசுக்கு கண்டனம் தெரிவித்த நடிகர் சங்கம்

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு தமிழக அரசு சார்பில் சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டது போல, தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் சிறப்பு அதிகாரியை தமிழக அரசு நேற்று நியமித்தது. அந்த அதிகாரியும் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்த நிலையில், அரசின் இந்த இத்தகைய நடவடிக்கைக்கு தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட சங்க நிர்வாகிகள், இது ஜனநாயக படுகொலை, என்று கூறி கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.
இது குறித்து நேற்று இரவு தென்னிந்திய நடிகர்கள் சங்கம் சார்பில் கார்த்தி, நாசர், பூச்சி முருகன், மனோபாலா, நடிகை சச்சி உள்ளிட்ட நிர்வாகிகள் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய தலைவர் நாசர், ”தென்னிந்திய நடிகர் சங்கத்தில் கடந்த தேர்தல் முதல் எங்கள் அணி சட்ட ரீதியாகவே அணுகி வருகிறது. முந்தைய அணிகள் செய்த தவறுகளை நாங்கள் செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். இம்முறை தேர்தலுக்கு பல பிரச்சனைகள் வந்த போதிலும் அவற்றை சட்ட ரீதியாகவே சந்தித்தோம். இப்போது சங்கத்தை நிர்வகிக்க நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரிக்கு எங்கள் ஒத்துழைப்பை அளிப்போம். அது எங்கள் கடமை. ஆனால், எங்கள் மீது எந்த ஒரு குற்றச்சாட்டுகளும் வைக்க முடியாத நிலையில் இதனை ஜனநாயக படுகொலையாகவே பார்க்கிறோம். ஆனால், அனைத்தையும் சட்ட ரீதியாகவே சந்திப்போம் என்று உறுதி கூறுகிறோம்.” என்றனர்.
அதிகாரிக்கு ஒத்துழைப்பு அளிக்கிறேன் என்று சொல்கிற போது, இதை ஏற்றுக் கொள்கிறீர்களா? என்று நிருபர்கள் கேட்டதற்கு, “இல்லை. ஆனால் அவர் பொறுப்பேற்று கொண்டார் என்கிற போது அவருக்கு ஒத்துழைத்து கணக்கை ஒப்படைப்பது எங்களது கடமை. ஆனால் இதனை சட்டப்படி நாங்கள் எதிர்கொள்வோம்.” என்று பதில் அளித்தனர்.
மேலும், ”விஷால் மீது எந்தவிதமான குற்றமே சொல்லவில்லை, அப்படி இருக்க எப்படி அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியும். எதாவது ஆதாரத்தின்படி குற்றம் சாட்டினால் நடவடிக்கை எடுக்கலாம் அப்படி எதுவுமே இல்லையே.
இது தொடர்பாக அமைச்சர்களை சந்தித்தோம். ஆனால், அது பற்றி வெளியிட முடியாது. பிரச்சினை என்னவென்றால் கடந்த ஏப்ரல் மாதம் வரை பென்ஷன் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இப்போது வழக்கு நடப்பதால் கட்டடம் கட்டுவது தொடர்பாக எதுவும் நடக்க வாய்ப்பில்லை. அடுத்த உறுப்பினர்கள் வந்து பொறுப்பேற்றால் தான் எல்லாம் நடக்க முடியும். ஆனால், நடிகர் சங்கத்தில் உதவி பெறுபவர்கள் சிலர் வழக்கு தொடர்கிறார்கள். அவர்களுக்கு ஆஜராகும் வழக்கறிஞர்கள் லட்சங்களில் பீஸ் வாங்குபவர்கள், இதன் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். நியாயமான தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம். அதற்கு சட்டப்படி போராடுவோம்.” என்று கார்த்தி தெரிவித்தார்.
முன்னால் முதல்வர்கள் பலரும் பங்கு கொண்ட அமைப்பு தான் இந்த நடிகர் சங்கம். நாங்கள் வந்த பிறகு கடனை அடைத்திருக்கிறோம். கட்டடம் கிட்டதட்ட முடித்திருக்கிறோம். ஆனால், பிரசவ நேரத்தில் இதனை நிறுத்தி வைத்துள்ளார்கள். அரசு சங்கத்திற்கு எதிராக இருக்கிறது என்று நாங்கள் நினைக்கவில்லை. ஆனால் இப்போது நடக்கும் பிரச்சனைகள் அனைத்தையும் சட்ட ரீதியாக சந்தித்து வெல்ல முடியுமென்று நம்புகிறோம், என்று தெரிவித்தவர்கள், இப்போது நடந்து கொண்டிருப்பது ஜனநாயக படுகொலை இதனை பத்திரிகையாளர்கள் தான் தட்டிக்கேட்க வேண்டும், என்றும் கூறினார்கள்.