இயக்குநர் அட்லீ மீது நடிகை பரபரப்பு புகார்! - அதிர்ச்சியில் விஜய்

’தெறி’, ‘மெர்சல்’ படங்களை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தை தளபதி 63 என்று அழைக்கிறார்கள்.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் மேயாத மான் இந்துஜா நடிக்கிறார். இவர்களுடன் கதிர், விவேக், யோகி பாபு, டேனியல் பாலாஜி, பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து உருவாகும் இப்படத்திற்காக ஈவிபி பிலிம் சிட்டியில் பிரம்மாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அதில் தான் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ’தளபதி 63’ படத்தில் பணியாற்றும் கிருஷ்ணாதேவி என்ற துணை நடிகை இயக்குநர் அட்லீ மீதும், உதவி இயக்குநர்கள் மீது காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் கூறியுள்ளார்.
அவர் அளித்த புகாரில், “ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வரும் அட்லீயின் திரைப்படத்தில் வேலை பார்க்க வந்தேன். நான் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது அட்லீயும் அவரது உதவியாளர்களும் என்னைத் தகாத வார்த்தைகள் பேசி வேலை பார்க்க விடாமல் வெளியே அனுப்பி விட்டார்கள்.
எனவே அட்லீ மற்றும் அவரது உதவியாளர்களை விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தால் கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், தனது படத்தில் இதுபோன்ற சர்ச்சைகள் வருவதை விரும்பாத விஜய், அட்லீ மீது நடிகை அளித்த புகாரால் அதிர்ச்சியடைந்திருக்கிறாராம்.