May 06, 2019 06:06 PM

சாந்தனுவுடன் ஜோடி சேரும் ஆனந்தி!

சாந்தனுவுடன் ஜோடி சேரும் ஆனந்தி!

‘பரியேறும் பெருமாள்’ வெற்றியை தொடர்ந்து ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தில் நடித்து முடித்திருக்கும் ஆனந்தி, தற்போது ‘ராவண கோட்டம்’ படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக ஒப்பந்தமாகியிருக்கிறார்.

 

‘மதயானை கூட்டம்’ படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாரன் இயக்கும் இப்படத்தை கண்ணன் ரவி குரூப் சார்பில் கண்ணன் ரவி தயாரிக்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.

 

சாந்தனு, ஆனந்தி ஹீரோ, ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தில், பிரபு, இளவரசு, சுஜாதா சிவகுமார், அருள்தாஸ், பி.எல்.தேனப்பன், முருகன், தீபா ஷங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். 

 

இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ராமநாதபுரம் சுற்று வட்டார பகுதிகளில் நடைபெற்று வரும் இப்படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமானது குறித்து நடிகை ஆனந்தி கூறுகையில், ”எனக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மிகச்சிறப்பான படங்கள் ஆரம்ப கட்டத்திலேயே கிடைத்தது என் அதிர்ஷ்டம். குறிப்பாக, 'பரியேறும் பெருமாள்' போன்ற படங்களில் நடித்த பிறகு, நல்ல வரவேற்பு கிடைத்த பிறகு கதைகளை கவனமாக தேர்வு செய்ய வேண்டிய நிர்பந்தம் உருவானது. ‘ராவண கோட்டம்’ அந்த மாதிரியான ஒரு திரைப்படம். இயக்குநர் விக்ரம் சுகுமாரன் ரசிகர்களை கவரும் மிகச்சிறப்பான ஒரு கதையுடன் வந்துள்ளார். மதயானை கூட்டம் படத்துக்கு பிறகு மிகவும் பொறுமையுடன் இந்த ஸ்கிரிப்டை உருவாக்கியுள்ளார். எந்தவொரு இயக்குநரும் புகழ் வெளிச்சத்திலேயே இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு படம் முடிந்த உடனே அடுத்த படத்தை துவங்க நினைப்பார்கள். ஆனால் அவர் அத்தகைய நடைமுறையிலிருந்து விலகி நிற்பவர். அவரது கடின உழைப்புக்கு ’ராவண கோட்டம்’ பரிசாக இருக்கும் என நம்புகிறேன். 

 

சாந்தனு பாக்யராஜ் தோற்றம் அனைவருக்கும் ஆச்சர்யத்தை அளிக்கும். படப்பிடிப்பு தளத்தில் நான் அவரை முதன்முறையாக பார்த்த போது என்ன உணர்ந்தேனோ அதை நீங்களும் உணர்வீர்கள். அவர் ஒரு சிறந்த நடிகர் மற்றும் நடன கலைஞராகவும் இருக்கிறார். உண்மையில், 'ஃபைட் சாங்' என்ற கான்செப்டை அடிப்படையாக கொண்ட, ஒரு பொழுதுபோக்கு பாடலில் தான் முதலில் நடித்தேன். சாந்தனு ஒரு திறமையான நடனக் கலைஞராக இருந்தாலும் கூட, அவருடன் நடனம் ஆடியது ஒரு சிறந்த அனுபவம்.” என்றார்.