May 23, 2024 07:08 PM

நீட் தேர்வின் மூலம் ஏற்பட்ட அவதிகளை சொல்லும் ‘அஞ்சாமை’! - ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் முதல் முயற்சி

நீட் தேர்வின் மூலம் ஏற்பட்ட அவதிகளை சொல்லும் ‘அஞ்சாமை’! - ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் முதல் முயற்சி

நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களை தயாரித்து மற்றும் வெளியிட்டு வரும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் முதல் முறையாக ‘அஞ்சாமை’ என்ற படத்தின் ஒட்டுமொத்த உரிமைகளையும் பெற்று வெளியிடுகிறது.

 

சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு நாடு முழுவதும் கொண்டு வந்த நீட் தேர்வினால் மாணவர்கள், பெற்றோர்கள், கல்வி நிறுவனங்கள் மத்தியில் பெரும் கேள்விகளும், குழப்பங்களும் ஏற்பட்டது. அதே சமயம், தமிழகத்தில் நீட் தேர்வினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் சிலர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவங்கள் நடந்தன. இத்தகைய நீட் தேர்வின் மூலம் ஏற்பட்ட அவதிகளை மையப்படுத்தி இதுவரை எந்த ஒரு திரைப்படமும் வெளியாத நிலையில், நீட் தேர்வின் மூலம் ஏற்பட்ட கல்வி மாற்றங்கள், மாணவர்களிடையே ஏற்பட்ட பாதிப்பு உள்ளிட்டவைகளை மையமாக கொண்டு உருவாகியுள்ளது ‘அஞ்சாமை’ திரைப்படம்.

 

இயக்குநர்கள் மோகன் ராஜா, லிங்குசாமி ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்திருக்கும் சுப்புராமன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இதில், விதார்த், வாணி போஜன், ரகுமான், கிரித்திக் மோகன் உள்ளிட்ட பலர் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். 

 

கார்த்திக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ராகவ் பிரசாத் பாடல்களுக்கு இசையமைக்க, கலா சரண் பின்னணி இசையமைத்துள்ளார். ராம்சுதர்ஷன் படத்தொகுப்பு செய்ய, ஜி.சி.அனந்தன் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். அறிவுமதி, கார்த்திக் நேத்தா, எஸ்.பி.சுப்புராமன், அருண் பாரதி ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.

 

திருச்சித்ரம் நிறுவனம் சார்பில் மனநல மருத்துவர் மற்றும் பேராசிரியர் என பல்வேறு துறைகளில் பணியாற்றிய  டாக்டர் எம்.திருநாவுக்கரசு இப்படத்தை தயாரித்திருக்கிறார். இப்படத்தின் மூலம் திரைப்படத்துறையில் இறங்கியிருக்கும் இவர், தொடர்ந்து நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களை தயாரிக்க திட்டமிட்டு முதல் படமாக ‘அஞ்சாமை’ படத்தினை தயாரித்திருக்கிறார்.

 

நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்புகளை மையப்படுத்திய படம் என்பதால் மக்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் அனைத்து உரிமைகளையும் முதல் முறையாக ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியிருப்பதால், இப்படத்தின் மீது மொத்த கோலிவுட்டின் பார்வையும் திரும்பியுள்ளது.

 

மேலும், இப்படத்தினை தொடர்ந்து இதேபோன்று நல்ல திரைப்படங்களை முழுமையான உரிமைகளை பெற்று வெளியிட ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.