Apr 22, 2019 06:07 AM

கல்லூரி விடுதிகளில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து உருவாகும் ‘மயூரன்’

கல்லூரி விடுதிகளில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து உருவாகும் ‘மயூரன்’

பி.எப்.எஸ் ஃபினாகில் பிலிம் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் கே.அசோக்குமார், பி.ராமன், ஜி.சந்திர்சேகரன், எம்.பி.கார்த்தில் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் ‘மயூரன்’. மயூரன் என்றால் விரைந்து உன்னை காக்க வருபவன், வெற்றி புனைபவன் என்று பொருள்.

 

இதில், வேல ராமமூர்த்தி, ஆனந்த்சாமி, அமுதவாணன், அஸ்மிதா, கைலாஷ், சாஷி, பாலாஜி ராதாகிருஷ்ணன், ரமேஷ்குமார், கலை, சிவா ஆகியோர் நடித்துள்ளனர். குணச்சித்திர நடிகர்கள் அனைவரும் கூத்துப்பட்டறையைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பரமேஷ்வர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தின் ஜுபின் இசையமைக்க, குகை மா.புகழேந்தி பாடல்கள் எழுதியுள்ளார். அஸ்வின் எடிட்டிங் செய்ய, எம்.பிரகாஷ் கலையை நிர்மாணித்துள்ளார். டான் அசோக் ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைக்க, ஜாய்மதி நடனம் அமைத்திருக்கிறார்.

 

இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் நந்தன் சுப்பராயன், இயக்குநர் பாலாவின் ‘நந்தா’, ‘பிதாமகன்’ போன்ற படங்கள் உதவி இயக்குநராக பணியாற்றியிருக்கிறார்.

 

படம் குறித்து இயக்குநர் நந்தன் சுப்பராயன் கூறுகையில், “சாதாரண குடும்பத்தின் கனவுகளை சுமந்துகொண்டு விடுதியில் தங்கி பொறியியல் உயர்கல்வி படிக்க வரும் மாணவன், ஒரு நள்ளிரவில் காணாமல் போனால் என்னவாகும் என்பதே கதை.

 

மொத்த குடும்பத்தின் ஒற்றை ஆதாரமான  அவனைத் தேடிச் செல்கையில் காணாமல் போனதின் மர்ம முடிச்சுகள் மேலும், மேலும் இறுகி, அது சிக்கல்களையும், பிரச்சனைகளையும் உருவாக்குகின்றது. கல்லூரி விடுதிகள் என்பது வெறும் தங்கி போகும் வாடகை சத்திரம் அல்ல அது வாழ்க்கையை செதுக்கும் பட்டறை களம். அவர்களது எதிர்காலத்தை நல்ல விதமாகவோ மோசமானதாகவோ மாற்றும் ரசவாதக் கூடம். 

 

நட்பு, அன்பு, நெகிழ்வு,  குற்றப் பின்னணி, குரூர மனம், எனும் பல்வேறு மனித இழைகளால் நெய்யப்பட்ட உலகம்தான் கல்லூரி விடுதிகள்.

 

சாதாரண கூழாங்கற்கள், வைரக்கற்களாகவும் வைரக்கற்கள் கண்ணிமைக்கும் வினாடிகளில் காணாமல் போகவும் வாய்ப்பு உள்ள இடம். அங்கு ஏற்படும் பிரச்சனைகள் ஒரு தனி மனித வாழ்வை எவ்வாறு தலைகுப்புற கவிழ்த்து போடுகிறது என்பதை பற்றி பேசும் படம் தான் மயூரன். ஒரு அருமையான கதை களத்தை விறுவிறுப்பான திரைக்கதை தேன் தடவி உருவாக்கியிருக்கிறோம். 

 

படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது.” என்றார்.