’அருவா’ படத்திற்காக சம்பளத்தை குறைத்துக் கொண்ட இயக்குநர் ஹரி!
சூர்யாவை வைத்து 5 திரைப்படங்கள் இயக்கியிருக்கும் இயக்குநர் ஹரி, சூர்யாவை 6 வது முறையாக இயக்கும் படத்திற்கு ‘அருவா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக ராஷி கண்ணா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கொரோனா பிரச்சினை முடிந்த பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கொரோனா பிரச்சினையால் சினிமா துறை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால், தயாரிப்பாளர்கள் பலர் பெரும் இழப்பை சந்திக்கும் சூழலும் உருவாகியிருப்பதால், நடிகர், நடிகைகள் தங்களது சம்பளத்தை குறைத்துக் கொள்ள வேண்டும், என்ற கோரிக்கை எழுந்தது.
இந்த நிலையில், இயக்குநர் ஹரி, தயாரிப்பாளர்களின் நிலையை உணர்ந்து, தான் இயக்க இருக்கும் ‘அருவா’ படத்திற்காக தான் பேசிய சம்பளத்தில் 25 சதவிகிதத்தை குறைத்துக் கொள்வதாக இன்று அறிவித்துள்ளார்.
இது குறித்து இயக்குநர் ஹரி கூறுகையில், ”இந்த கொரோனா பாதிப்பால் நம் திரையுலகம் மிகுந்த பாதிப்பு அடைந்துள்ளது. நம்முடைய தயாரிப்பாளர்கள் நன்றாக இருந்தால் தான் நம் தொழில் மறுபடியும் நல்ல நிலைக்கு திரும்பும். இந்த சூழலை மனதில் கொண்டு, நான் அடுத்ததாக இயக்கப் போகும் ‘அருவா’ திரைப்படத்திற்க்கு என்னுடைய சம்பளத்தில் 25 சதவிகிதம் குறைத்துக்கொள்ள முடிவுசெய்துள்ளேன்.” என்று தெரிவித்துள்ளார்.
விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்து வரும் மூன்று படங்களில் தான் பேசிய சம்பளத்தில் 25 சதவிகிதத்தை குறைதுக் கொள்வதாக சமீபத்தில் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.