Apr 20, 2020 04:57 AM

மது விற்பனையில் ஈடுபட்ட ‘திரெளபதி’ நடிகர் கைது!

மது விற்பனையில் ஈடுபட்ட ‘திரெளபதி’ நடிகர் கைது!

கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால், தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இருப்பினும், தமிழகத்தின் பல பகுதிகளில் கள்ளத்தனமாக மது பாட்டில்களை சிலர் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இப்படி விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்கள், குவாட்டர் ரூ.800 மூதல் ரூ.1200 வரை விற்பனை செய்யப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

சென்னையில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபடுபவர்களை பிடிக்க தெற்கு இணை ஆணையர் மகேஸ்வரி உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில், நேற்று இரவு சென்னை, எம்.ஜி.ஆர் நகர் அருகே சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறைக்கு கிடைத்த தகவலின் படி, ஒரு வீட்டில் சோதனை செய்த போது, ரிஸ்வான் என்பவர் கள்ளத்தனமாக மது விற்பனை செய்வது தெரிய வந்தது.

 

இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார் அவர் வீட்டில் இருந்து 57 குவாட்டர் பாட்டில்கள், 12 பீர் பாட்டில்கள் மற்றும் ரூ.23 ஆயிரம் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

 

மேலும் அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், அவர் சமீபத்தில் வெளியான ‘திரெளபதி’ படம் உள்ளிட்ட சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருப்பது தெரிய வந்தது. மேலும், சினிமா புரொடக்‌ஷன்ஸ் வேலை செய்பவர்களிடம் இருந்து ஒரு குவாட்டரை 1000 ரூபாய்க்கு வாங்கி, அதை 1200 ரூபாய்க்கு ரிஸ்வான் விற்பனை செய்து வந்துள்ளார்.

 

ரிஸ்வான் அளித்த தகவளின்படி சாலிகிராமத்தைச் சேர்ந்த சினிமா புரொடக்‌ஷன் ஊழிஅர் பிரதீப் மற்றும் அவரது கார் டிரைவர் சூளைமேடு பகுதியை சேர்ந்த தேவராஜ் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். தேவராஜ் காரில் பதுக்கி வைத்து இருந்த 189 குவார்ட்டர் பாட்டில்கள், 20,000 ரூபாய் பணம் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.