Apr 05, 2024 05:58 PM

சதுரங்க விளையாட்டு பின்னணியில் அரசியல் மற்றும் சாதி பிரச்சனை பேச வரும் ‘நாற்கரப்போர்’

சதுரங்க விளையாட்டு பின்னணியில் அரசியல் மற்றும் சாதி பிரச்சனை பேச வரும் ‘நாற்கரப்போர்’

விளையாட்டை மையமாக வைத்து பல படங்கள் வந்திருந்தாலும், சதுரங்க விளையாட்டை மையமாக வைத்து தமிழ் சினிமாவில் உருவாகும் முதல் படம் என்ற அடையாளத்தோடு  உருவாகிறது ‘நாற்கரப்போர்’. வெறும் விளையாட்டு போட்டியோடு இல்லாமல், அதன் பின்னணியில் இருக்கும் அரசியல் மற்றும் சாதி பிரச்சனையை பேச வரும் இப்படத்தை V6 பிலிம் பிரைவேட் லிமிடெட் சார்பில் எஸ்.வேலாயுதம் தயாரிக்க, ஸ்ரீ வெற்றி இயக்குகிறார். இவர் எச்.வினோத், ராஜபாண்டி உள்ளிட்ட பல இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

 

’இறுகப்பற்று’ படம் மூலம் கவனம் பெற்ற நடிகை அபர்ணதி கதாநாயகியாக நடிக்க, படத்தின் மைய கதாபாத்திரமாக சேத்துமான் படத்தில் நடித்த அஸ்வின் நடிக்கிறார். முக்கிய வேடத்தில்  ’கபாலி’, ’பரியேறும் பெருமாள்’  புகழ் லிங்கேஷ் நடிக்க, வில்லனாக சுரேஷ் மேனன் நடிக்கிறார்.

 

பிரபல மலையாள இயக்குநர் மேஜர் ரவியின் மகன் அர்ஜுன் ரவி, மற்றும் ஞானசேகரன் ஆகியோர் இப்படத்தின் மூலம் தமிழில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார்கள். சந்தோஷ் நாராயணனிடம் பல படங்களில் இணைந்து பணியாற்றிய தினேஷ் ஆண்டனி இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ரஞ்சித் சிகே என்பவர் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். கலை ஶ்ரீமன்ராகவன். பாடல்கள் குகை மா புகழேந்தி. 

 

இப்படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ள நிலையில், படம் குறித்து இயக்குநர் ஸ்ரீவெற்றி கூறுகையில், “சதுரங்க விளையாட்டை மையப்படுத்தி இந்த படம் உருவாகி உள்ளது. ஏழை-பணக்காரன், உயர் ஜாதி-தாழ்ந்த ஜாதி, அரசியல்வாதி-மக்கள் என இவர்களுக்கு இடையே காலங்காலமாக இருக்கும் பிரச்சினைகளையும், அனைத்தும் அனைத்து மக்களுக்கும் சம அளவில் கிடைக்கும் படியான தொலைநோக்கு பார்வை இல்லாத வரை இங்கு இவர்களுக்குள்ளான போர் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் என்ற அரசியலை பேசுகிறது. அதிகாரம் என்பது செயல்பாடுகளை நெறிமுறைப்படுத்துவதற்க்கே அன்றி தனிமனித தாக்குதலாக மாறக்கூடாது என்பதையும் சதுரங்க விளையாட்டின் பின்னணியில் இந்த படம் பேசுகிறது. தூய்மைப்பணி செய்யும் சமுதாயத்தில் இருந்து வந்த ஒருவன் எப்படி ‘கிராண்ட் மாஸ்டர்’ ஆகிறான்? அதற்காக அவன் சந்திக்கும் அரசியல் ரீதியான, சாதி ரீதியான, பிரச்சனைகள்  என்ன என்பதை சொல்லும் அழகான ஒரு ஸ்போர்ட்ஸ் டிராமாவாக இந்த ‘நாற்கரப்போர்’ உருவாகி உள்ளது” என்கிறார்.

 

Narkara Por First Look

 

சென்னை மற்றும் திண்டுக்கல் ஆகிய இடங்களில் இதன் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 40 நாட்கள் நடைபெற்றுள்ளது. அந்த பகுதியைச் சேர்ந்த கிராமத்து மனிதர்கள் பலரையும் இந்த படத்தில் நடிக்க வைத்துள்ளார்கள்.

 

தற்போது படத்தின் வெளியீட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விரைவில் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவை பிரமாண்டமான முறையில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.