‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படப்பிடிப்பு முடிந்தது!

‘பரியேறும் பெருமாள்’ வெற்றியை தொடர்ந்து நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிக்கும் படம் ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’. தினேஷ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் ஆனந்தி ஹீரோயினாக நடிக்கிறார். இவர்களுடன் முனீஷ்காந்த், ரித்விகா, லிஜீஷ், மாரிமுத்து உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
அதியன் ஆதிரை என்ற அறிமுக இயக்குநர் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, திண்டிவனம், பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில் நேற்றுடன் முழு படப்பிடிப்பும் முடிவடைந்தது.
இரண்டு கட்டமாக நடந்து வந்த படப்பிடிப்பு முடிவடைந்ததை ஒட்டி படக்குழுவினர், கேக் வெட்டி கொண்டாடி தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இது குறித்து கூறிய இயக்குநர் அதியன் ஆதிரை, “திட்டமிட்டதை விட சீக்கிரமே படப்பிடிப்பை முடித்திருக்கிறோம். அனைவரும் முழு நிறைவாக வேலை செய்திருக்கிறோம். விரைவில் எடிட்டிங், டப்பிங் பணிகள் தொடங்க இருக்கிறது. நிச்சயம் தமிழ் சினிமாவில் புதிய பாய்ச்சலாக இந்தப்படம் இருக்கும்.” என்றார்.